Monday, December 5, 2011

வரலாற்றில் திருக்கோணமலையல்ல; திருகோணமலையே வாழும்

திருகோணமலை பற்றிய தகவல்களை எழுத்தில் பதிவு செய்யும் போது 'திருகோணமலை' என்று எழுத வேண்டுமா அல்லது' திருக்கோணமலை' என்று எழுதவேண்டுமா என்பது திருகோணமலை கலை இலக்கிய வாதிகளிடையே வாதவிவாதத்திற்கு உரியதாக இருந்து வருகிறது.  திருகோணமலை என்று எழுதவதையே பெருமையாக் கொள்ளும் தலைமுறை வளர்ந்து அதைபெருமையுடன்  பின்பற்றிக்கொண்டு இருக்கின்றது. இதில் திருகோணமலை இந்துக்கல்லூரியின் பங்கு முக்கியமானது. இந்துக் கல்லூரியின மாணவர்களே திருகொணமலையின் கலைஇலக்கிய நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புக்களில் இருப்பதால் ''திருகோணமலை'' எனப் பேசுவதுதான் சரியானது பெருடையானது என்றாகிவிட்டது.

கடந்த 2008ம் ஆண்டு மயூரண்ணா (மு.மயூரன்) ''திருகோணமலையும் திருக்கோணமலையும்'' என்ற பதிவை எழுதியிருந்தார். திருகோணமலை பெயர்க்காரணங்களை ஆராய்ந்துள்ளதுடன், திருணமலையை எழுதும் போது 'திரு'வுக்கும் 'கோணமலை' க்கும் இடையில் கண்டிப்பாக "க்" போடவேண்டும் என்று கட்டாயப்படுத்துபவர்களது வாதங்கள் நேர்மையான முறையில் முன்வைத்து தனது நிலைப்பாட்டையும் முன்வைத்திருந்தார். அதலில் நான் திருக்கோணமலை என்பதை மறுப்பதற்கு வலுவான சான்றுகள் வைத்திருப்பதாக என்னுடைய நிலைப்பாட்டை குறிப்பிட்டதுடன் என்னையும் பின்னூட்டமிட அழைத்திருந்தார். சோம்பல் காரணமாக அதற்கு இதுநாள்வரை முறையான பதில் எதையும் நான் எழுதவில்லை. அத்துடன் அந்த விடயம் சென்று விட்டது. தற்போது திருகோணமலை பற்றிய வரலாற்று நூல்களை வாசித்தபோது இந்த விடயம் ஞாபகம் வந்தது. அத்துடன் எனது பதிலையும் எழுதிவிடுகிறேன்.

"திருக்கோணமலை" என்பதை வலியுறுத்துபவர்கள் சொல்லும் காரணம் தமிழ் இலக்கணப்படி "திருக்கோணமலை" என்று புணர்ந்து தமிழ்த் தன்மையையுடன் காணப்பட்டது. அது காலப்போக்கில் தமிழ்த்தனமையை இழந்து ''திருகோணமலை'' ஆகிவிட்டது. தமிழ்களாகிய நாம் திருகோணமலையின் தமிழ் தன்மையை அடையாளப்படுத்த "திருக்கோணமலை" என்றே அழைக்க வேண்டும், திருகோணமலை என்பது தமிழ்த்தன்மைக்கு விரோதமானது என்பதே. மேலும் திருகோணமலையின் அடையாளமும் சிறப்பும் "திருக்கோணேஸ்வரம்" தான் ஆகவே கோணேசப் பெருமானின் தெய்வீகத் தன்மையைச் சேர்த்து திருகோணமலையின் சைவ/இந்து பாரம்பரியத்தையும் உறுதிப்படுத்த "திருக்கோணமலை" என்பதே ஏற்புடையது என்பதே.


"திருகோணமலை" என்பதை நாம் வலியுறுத்துவதற்குக் காரணம் வரலாற்று ரீதியானது. திருகோணமலையின் வரலாற்று தன்மை மறையாமல் காப்பது. மூவின மக்களும வாழும் திருகோணமலையின் தன்மையை அப்படியே ஏற்றுக் கொள்வது. என்பதாக அமையும். இதற்கு நாம் வரலாற்றுக் காலங்களில் திருகோணமலை எவ்வாறு அழைக்கப்பட்டு வ்நதிருக்கிறது என்று பார்ப்பது பயனுடையதாக அமையும்.

திருக்கோணமலையை வலியுறுத்துபவர்கள் பிழையான வரலாற்றுத் தகவல்களை குறிப்பிடுகின்றார்கள் அவை வருமாறு

10,11 ஆம் நூற்றாண்டு சோழர்காலக் கல்வெட்டுக்கள்.

15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழில் “விலைக்கு மேனியில்” என ஆரம்பிக்கும் திருப்புகழில் “திருக்கோணாமலை தலத்தாரு கோபுர” என்றும், “தொடுத்த வாளென” என்று ஆரம்பிக்கும் திருப்புகழில் “திருக்கோணாமலை தருக்குலாவிய” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய மொழி மொழிபெயர்ப்புக்கள் :-
ஆங்கிலத்தில் Trincomalee. “c” க்குப் பதிலாக “h” வந்திருக்க வேண்டும்.
சிங்களத்தில் "திருகுணாமலய". "கு" க்குப் பதிலாக "கோ" வந்திருக்க வேண்டும்.

கோணேசர் கல்வெட்டில் “திருக்கோணமலை” என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. (குளக்கோட்டன் காலம் சர்ச்சைக்குரியது.ஆகவே இது 11 அல்லது 13 ஆம் நூற்றாண்டுக்குரியது).
1889 இல் ஸ்ரீமான் வே.அகிலேசப்பிள்ளை அவர்கள் எழுதிய “திருக்கோணாசல வைபவம். ஆகியவை ஆகும்.

வரலாற்றில் திருகோணமலை எவ்வாறு அழைக்கப்பட்டது என்பது பற்றிய முதலாவது தகவல் மகாசேனன் காலத்தில்தான் கிடைக்கிறது.  மகாவம்சம் மகாசேனவின் ஆட்சிக்காலத்தில் மகாயன பௌத்தத்திற்கு ஆதரவாக ஏனைய மதங்களுக்கெதிராக அவன் மேற்கொண்ட  நடவடிக்கைகளில் அவனால் இடிக்கப்பட்ட விகாரைகளினுள் "கோகர்ணப் பிராமண விகாரை"யும் ஒன்று என்றுகூறுகிறது.மகாவம்சத்தின் உரை நூலான "மஹாவங்சதீக" இது பற்றிய தெளிவான குறிப்புக்களை தருகிறது. இது கோணேஸ்வரமே என்பதை வராலற்றியலாளர் கலாநிதி.செல்லத்துரை குணசிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.1

மகாசேனன் ஆட்சிக்காலம் கி.பி 3ம் (275-301)நூற்றாண்டு. எனவே அக்காலத்தில் கோகர்ணம் என்பதே திருகோமலையின் பெயராக இருந்திருக்கிறது. இதையே மகாவம்சம் "கோகண்ண" எனக் குறிப்பிடுகிறது. இந்தியாவில் உள்ள திருக்கோகர்ணம் என்ற சிவதலத்திலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்பது செ.குணசிங்கம் குறிப்பிடுகிறார்.2

அடுத்த குறிப்பு  'வாயுபுராணத்தில்' வருகின்ற குறிப்பில் திருகோணமலை 'கோகர்ணம்' என்றே குறிப்பிடப்படுகிறது.
 "இந்தத் தீவின் கிழக்குக் கரையில் கோகர்ணம் எனப்பெயர்கொண்ட சங்கரருக்கான பெரிய கோவில் ஒன்று இருக்கின்றது" 3. இதில் குறிப்பிடப்படும் "கோகர்ணம்" கோணேஸ்வரமே. வாயுபுராணம் அதன் இறுதிவடிவத்தை அடைந்தது கி.பி 4ம் நூற்றாண்டு அல்லது கி.பி5ம் நூற்றாண்டு.3 "சூளவம்சத்தில்" உள்ள ஒரு கதையில்க்கூட திருக்கோணமலைப் பிரதேசம் "கோகர்ணம்" என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.4

ஆக கி.பி 5ம் நூற்றாண்டுவரை திருகோணமலையும் கோணேஸ்வரமும் 'கோகர்ணம்" என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.


இதற்கு அடுத்ததாகத்தான் மிகப்பிரபலமான திருஞானசம்பந்தருடைய தேவாரம் கோணேஸ்வரத்தின் மீது பாடப்படுகிறது. அதிலே அவர் கோணேஸ்வரத்தை "கோணமாமலை" என்றே குறிப்பிடுகிறார். திருஞான சம்பந்தரின் காலம் கி.பி 7ம் நூற்றாண்டு. எனவே கொணேஸ்வரத்தின் பெயர் கி.பி 5ம் நூற்றாண்டிற்கும் கி.பி 7ம் நூற்றாண்டிற்கும் இடையில் "கோணமாமலை" என்று வழங்கத் தொடங்கியிருக்கிறது. திருஞானசம்பந்தர் தேவாரத்தின் பத்து பாடல்களிலும் "கோணமாமலை" என்றே குறிப்பிடப்படுகிறது.கோணமலை என்ற அல்ல.5 ஏனெனில் அவர் துளுவ நாட்டிலுள்ள திருக்கோகர்ணத்தை "கோகர்ணம்" என்றே குறிப்பிடுகிறார்.6

கி.பி. 7ம் நூற்றாண்டுவரை திருகோணமலையின் பெயரில் "திரு" ஒட்டவில்லை. தமிழகத்தில் எழுச்சி பெற்ற சைவ,வைணவ பக்தி இயக்கங்களின் செல்வாக்கினால் தோவரங்களிலும், திவ்விய பிரபந்தத்திலும் பாடல்பெற்ற சைவ, வைணவத் தலங்களுடன் அவற்றின் புனிதத் தன்மையைக் குறிக்க 'திரு"சேர்த்துக் கொள்ளப்படத் தொடங்கியிருக்கலாம். இதுவரையான சான்றுகளின் படி திருகொணமலையின் பெயர் திருக்கோணேஸ்வரத்தை மையப்படுத்திய அமைந்துள்ளதை கவனிக்க.

இதற்கு அடுத்ததாக கிடைக்கும் சான்றுகள் மிகமுக்கியமானவை. ஏனைய சான்றுகளைப் போல அல்லாமல் இச்சான்றுகள் வலுவானவை. ஏனெனில் அவை கல்வெட்டுச் சான்றுகளாகும். தவிர கோணேசர் ஆலயத்தையும் அதுஅமைந்துள்ள ஊரையும் தனிதனியாகக் குறிப்பிடும் முதல் வரலாற்றுச் சான்றுகளாக இவைஉள்ளன. திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட மானாங்கேணிக் கல்வெட்டும், நிலாவெளிக்கல்வெட்டுமே அவை. இவை இரண்டம் சோழராட்சிக்குரியவை. இவை தொடர்பில் காலநிதி.செ.குணசிங்கம் அவர்களும் பேராசிரியர்.சி.பத்மநாதன் அவர்களும் விரிவான ஆராய்ச்சிகளை செய்துள்ளனர்.


மனாங்கேணிக் கல்வெட்டு கி.பி 11ம் நூற்றாண்டில் சோழரின் பிரதிநதியாக இலங்கையில் ஆட்சி செலுத்திய "சோழஇலங்கேஸ்வரனுடையது ஆகும் சோழஇலங்கேஸ்வரன் 1023 ல் பட்டமேறினான் என்பதை பேராசிரியர் சி.பத்மநாதன் மிக்கபுலமையுடன் சான்றுப்படுத்தியுள்ளார்.7 ஆக இக்கல்வெட்டு 11ம் நூற்றாண்டுக்குரியதாகும். பெரும்பாலும் சிதிலமடைந்த இக்கல்வெட்டை கலாநிதி செ.குணசிங்கம் பிரதியெடுத்து வாசித்துள்ளார். இதனை ஒட்டி பேராசிரியர்.சி.பத்மநாதனும் "இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்" என்ற நூலில் இக்கல்வெட்டு தொடர்பான விரிவானக குறிப்புக்களை வழங்கியுள்ளார்.8 திருகோணமலை வரலாற்றாளர் கலாநிதி.க.சரவணபவனும் தமது 'வரலாற்றுத் திருகோணமலை"  நூலில் இதுபற்றிய குறிப்புகளை வழங்கியுள்ளார்.9

செ.குணசிங்கம் அவர்கள் வாசித்த அக்கல்வெட்டின் வாசகம் வருமாறு க.சரவணபவன் தனது வரலாற்று திருகோணமலை நூலில் குறிப்பிட்டுள்ளார். (அடிக்குறிப்பில் செ.குணசிங்கம் அவர்களது கட்டுரை குறிக்கப்பட்டுள்ள)

.......ஸ்ரீ சோழ இல............
..தேவற்கு யாண்..............
....டி சொழ மண்டெ.........
...ந்த்ர சோழ வள....
.....சோழ வளநா.......
...மலை ஸ்ரீ மச்சு.......
....மூலஸ்த்தானமு........
....வர முடையார்...
...ள மண்டலத்தி..........

சிதைந்த எழுத்துக்கள் இட்டு நிரப்பி திருத்தி எழுதப்பட்ட வாசகம்

ரான உடையார் ஸ்ரீ சோழ இலங்கேஸ்
வரதேவற்கு யாண்டெட்டாவது
மும்முடி சோழ மண்டலத்து
இராஜேந்திர சோழவளநாட்டு கோண
மாமலை ஸ்ரீ மச்சுகேஸ்வரம்
ரமுடையார் மூலஸ்த்தானமும்
ஸ்வரமுடையார் கோயிலும்
சோழ மண்டலத்து இராஜே
ந்த்ரசிங்க வளநாட்டு இன்னம்
பர் நாட்டு
வேளான் கணபதி. 

மேற்குறித்த வாசங்களை பேராசியர்.சி.பத்மநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்.10 ஆயினும் வாசகத்தின் 6வது வரியில் வரும் "மலை மச்சு(கேஸ்வர)" என்பது கோணேசர் கோயிலைக் குறிக்கிறது. மச்சகேஸ்வரம் கோணேசர் கொயிலின் பெயர்களில் ஒன்று.இத தொடர்பான விளக்கம் தட்சின கைலா புராணத்தின் மச்சாவதாரச் சருக்கத்தில் காணப்படுகிறதாக குறிப்பிடப்படப்படகிறது.11 இக்கல்வெட்டில் "மலை" என்பது கொணேசர் கோவில் இருக்கும் திருகோணமலையைக் குறிக்கிறது. "மச்சகேஸ்வரம்" எனபதே கொணேசர் கோவிலைக் குறிக்கிறது.

"மலை" என்பதற்கு முன்னால் உள்ள எழுத்துக்கள் சிதைவடைந்த படியால் அதை செஇகுணசிங்கம் அவர்கள் "கோணமாமலை" என்றும் சி.பத்மநாதன் அவர்கள் "திருகோண மலை" யென்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டின் வரலாற்று பொருள் ஒ்னறு என்பதால் அதுபற்றி அவர்கள் பெரிதும் கவனிக்கவில்லை. "மலை" என்பது மட்டுமெ தெளிவாக உள்ளதால் கோணமாமலையா? திருகோணமலையா? திருக்கோணமலையா? என்ற பெயர் தொடர்பில் இது நமக்கு வழிகாட்டாது. ஆயினும் கோணெசர் கோவிலின்றும் திருகோணமலையை தனித்து குறிப்பிடப்பட்டுள்ளத என்பதை அறியமுடியும்.

அடுத்து சான்று நிலாவெளிக் கல்வெட்டாகும். திருகோணமலை திருக்கோணமலை பற்றிய விவாதத்தில் மிகமுக்கியமான சான்றாக இது அமைகிறது. நிலாவெளி பிள்ளையார் கோயில் கிணற்றின் படிக்கட்டாக அமைந்துள்ள இக்கல்வெட்டையும் நான் முன்பு குறிப்பிட்ட வரலாற்றறிஞர்கள் வாசித்து ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். இச்சாசனத்தை காலநிதி.செ.குணசிங்கம் 11ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திற்குரியதாகவும் கலாநிதி.கா.இந்திரபாலா 10ம் நூற்றாண்டிற்குரியதாகவும் கொள்கின்றனர்12. பேராசிரியர்.சி.பத்மநாதனும் இக்கல்வெட்டு 10ம் 11ம் நூற்றாண்டிற்குரியது என்கிறார்13.

பேராசிரியர்.சி.பத்மநாதன் இக்கல்வெட்டின் வாசகத்தை "இலங்கைத் தமிழ் சாசனங்கள்" என்ற நூலில் 406ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ் (வஸ்தி ஸ்ரீ)...
சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண
மலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு நிச்சலழிவு
க்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம கி(ரி)
கண்ட கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும் இடமும்
ஊர்ரிருக்கையும் தே வாலயமும் மே நோக்கிய ம
ரமும் கீழ் னொக்கிந கிணறும் உட்பட்ட இந்நிலத்து
க் கெல்லை கிழக்குக் கழி எல்லை தெற்கெல்லை க
ல்லு குடக்கு எத்தகம்பே எல்லை வடக்கெல்
லை சூலக்கல்லாகும் சுடர் கோணமா மலை தனி
ல் நீலகண்டர் (க்)கு நிலம் இவ்விசைத்த பெருநான்
கெல்லையிலகப்பட்ட நிலம் இருநூற்று
ஐம்பத்திற்று வேலி இது பந்மா யே
ஸ்வரரஷை

கலாநிதி செ.குணசிங்கம் அவர்களது வாசிப்பின் சாரத்தை கலாநிதி.க.சரவணபவன் "வரலாற்றுத் திருகோணமலை" நூலில் 125ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண
மலை மச்ச கேஸ்வரமுடைய மகாதேவர்க்கு நிச்சலழி
வுக்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம, கிரி
கண்ட கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும்
தேவாலயமும் மேனோக்கின் மரமும்
 கீழ் நோக்கின் கிணறும் உட்பட
 இந்நிலத்துக் கெல்லை தெற்கெல்லை
கல்லு குடக்கு எத்தகம்பே எல்லை
வடக்கெல்லை சூலக்கல்லாகும் சுடர் கோணமாமலை தனில்
நீலகண்டருக்குரிய நிலம் இவ்விசைத்த பெருநான்
கெல்லையில் அகப்பட்ட நிலம் இருநூற்று
ஐம்பத்திற்று வேலி இது பன்மயே
சுரரட்ஸ


செ.குணசிங்கத்தின் வாசிப்பாக க.சரவணபவனின் நூலிலுள்ள பந்தியில் சி.பத்மநாதன் வாசிப்பில் உள்ள சில வரிகள விடப்பட்டுள்ளன. ஆயினும் அவை நம்முடைய பேசுபொருளுக்கு சமப்ந்தமில்லாதவை எனவே நமக்கு ஒத்திசைவானவற்றைப் பற்றி பார்ப்போம்.

இக்கல்வெட்டின் விளக்க வாசகம் வருமாறு

'கிழக்கே கடல், மேற்கே எட்டம்பே, வடக்கே சூலம் பொறிக்கப்பட்ட எல்லைக் கல், தெற்கே எல்லைக்கல் என்பன எல்லையாகக் கொண்ட உரகிரிகாமம், கிரிகண்டகாமத்து பாசன நிலமும், வானம் பார்த்த நிலமும் அது உள்ளடக்கியுள்ள தேவாலயமும், மரங்களும், கிணறுகளும் திருகோணமலையிலுள்ள மச்சகேஸ்வரத்து மகேஸ்வரருடைய தினப் பூசைச் செலவுக்காக சூரியனும் சந்திரணும் உள்ளவரை நிலதானம் செய்யப்படகின்றது. நான்கு எல்லைகளுக்குள் அடங்கிய இந்த இருநூற்றி ஐம்பது வேலி நிலமும் கோணமமாமலையில் வீற்றிருக்கும் நீல கண்டத்தை உடைய சிவனுக்குரியதாகும். இந்த நிலதானம் திருக்கோணேஸ்வரத்து அறங்காவலர்களான சிவனடியார்கள் குழுவின் பாதுகாப்பில் இருக்கும்.'14

செ.குணசிங்கம், சிஇபத்மநாதன் ஆகிய இருவரதும் வாசிப்பில் "திருகோணமலை மச்சகேஸ்வரமுடைய" என்ற வரி தெளிவாக உள்ளது. "திருகோணமலை" "கோணமாமலை" என்ற பெயர்கள் இக்கல்வெட்டில் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருப்பதை இரு அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.15

கவனிக்க 'திருக்கோணமலை' அல்ல "திருகோணமலை என்றே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருகோணமலை மச்சகேஸ்வரம் எனக்குறிப்பிடப்படுவதனால் 'திருகோணமலை" என்பது கோணேசர் கோயிலை குறிக்காமல் அது அமைந்துள்ள ஊரைக்குறிக்கிறது. கோணேசர் கோயில் 'மச்சசேஸ்வரம்' எனக்குறிப்பிடப்படுகின்றது. அதே போல் "கோணமாமலை தனில் நீலகண்டர்க்கு" என்ற வரிமூலம் 'மச்சகேஸ்வரம்' அமைந்ததுள்ள மலையின் பெயர் கோணமாமலை எனப்பட்டதை அறியலாம். 7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தரும் "கோணமாமலை அமர்ந்தாரே" என்று திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ளது கோணமாமலை என்பதை குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து 7ம் நூற்றாண்டில் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள இடத்தின் பெயர் மாறாமலே 11ம் நூற்றாண்டிலும் இருந்துள்ளதை அறியலாம்.

இக்கல்வெட்டின் மூலம் திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்துடன் மையப்படுத்தாமல் ஊராக அடையாளப்படுத்தப்படவதையும், "திரு" என்ற பகுதி ஒட்டிக் கொண்டிருப்பதையும் அறியலாம். ஆகவே கோணமலையுடன் "திரு" என்ற பகுதி 11ம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு முன்னரேயே கோணமலையுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். அப்போதே திருவுக்கும் கோணமலைக்கும் இடையில் "க்" இல்லாமல் இருப்பதையும் கவனிக்கலாம்.

திருக்கோணேஸ்வரத்தை மையப்படுத்தாமல் ஒரு ஊராக அல்லது மக்கள் வாழிடமாக திருகோணமலையை குறிக்கும்போது "திருகோணமலை" என்றே குறிப்பிடப்படுகிறது. இதே 10ம் 11ம் நூற்றாண்டுகளில் திருகோணமலையில் தமிழ் பௌத்தர்களும் செல்வாக்குடன் வாழந்திருக்கிறார்கள் இதை இராசஇராசப் பெரும்பள்ளியும் அதில் கண்டெடுக்கப்பட்ட, அதைப்பறி குறிப்பிடுகின்ற சோழராட்சிகால கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். எனவே அப்போது திருகோணமலை திருக்கோணேஸ்வரத்துடன் அடையாளப்படுத்தப்படவில்லை. 'திருகோணமலை' என்ற பெயர் இதில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் பிரதிநிதிப் படுத்துகின்ற ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. 'திருகோணமலை" என்பத ஒற்றை அடையாளத்தை ஒரு மத இன மேலாதிக்கத்தை மறுதலிப்பதாக அமைந்திருக்கிறது. இது மிகவும் முக்கியமானது.

ஆயினும் போர்த்துகேயருடைய காலம்வரை கோணேசர் கோயிலும் அது அமைந்திருந்த கோணமாமலையில் இருந்த சைவ சமூகமே திருகோணமலையின் முக்கியத்துவம் மிக்கதும் பெருநிதிக்குவியமாகவும் செல்வாக்குமிக்கதாகவும் விளங்கியது.

 தமிழக்கத்தில் எழுச்சிபெற்ற 2ம் பாண்டிய பேரரசு காலத்தில் அதனை உருவாக்கிய முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் திரகொணமலை மலைவரை படையெடுத்தவந்தான். இப்படையெடுப்பை முதலாம் ஜடாவர்மனோடு துணையாட்சி செய்த ஜடாவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1253 -1281)இலங்கைமீது படையெடுத்து தனது வெற்றியைக் குறிப்பதற்காக தனது வம்ச  இலட்சினையான இரட்டைக் கயல் அடையாளத்தை திருகோணமலையில் பொறித்து சென்றான். இது பற்றி தமிழக்த்தில் உள்ள அவனது பதினொராம் ஆட்சியாண்டக்குரிய குடுமியாமலைச் சாசனம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது

அரைசு கெழுதாயம் அடையவாரி
கானா மன்னவர் கண்டு கண்டேங்க
கோணமாமலையிலும் திரிகூடக்கிரியிலும்
உருகெழு கொடிமிசை இருகயலெழுதி
எனை வெந்தனை ஆணை கொண்டு 16

இன்று திருகோணமலை பிரெடரிக் கோட்டை வாயிலின் இரு மருங்கிலும் உள்ள இரட்டைக் கயல் சின்னங்கள் இவனுடையதே என்று நம்பப்படுகிறது. இதிலும் திருகோமணலை என்ற குறிப்பிடாது கோணமாமலை என்று திருக்கோணேஸ்வரம் அமை்நத மலையின் பெயரே குறிப்பிடப்படுகிறது. அது நான் முன்குறிப்பிட்ட மாதிரி திருகோணமலையின் மையப்பகுதி கோணமாமலையாக இரந்தபடியாற்தான். இது திருக்கோணேஸ்வரம் எவ்வளவு செல்வாக்காகவும் நிதிக்குவியமாகவும் விளங்கியது என்பதை உணர்த்த போதுமானதாகும். ஆனால் இதில் "திரு'' என்ற அடைமொழி காணப்படவில்லை. கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள கோணமாமலைப் பகுதியைப்பற்றியயெ இது குறிப்பிடுகிறது எனக் கொள்ளலாம்.

திருகோணமலையில் 'திரு'வுக்கும் கோணமலைக்கு இடையில் "க்"  சேர்த்தபடி கிடைக்கும் சான்று அருணகிரிநாதருடைய 'விலைக்கு மேனியர்" என்ற திருப்புகழில் வரும்

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே

என்ற அடிகளே. இதன் பொருள்வருமாறு "என்றுமே நிலைத்து நிற்கின்ற நான்மறைகளை அன்புடன் ஓதிவரும் பெருமைமிகு அந்தணர்கள் வாழுகின்ற திருக்கொணாமலை என்கின்ற திருத்தலத்தில் ஓங்கிநிற்கும் கோபுர வாயிலினுள் அமைந்திருக்கும்
'கிளிப்பாடுபூதி' என்னும் நிலையினுள் எழுந்தருளி இருப்போனே!" என்றாகும்.

அருணகிரிநாதர் திருப்புகழில் "திருக்கோணமலை" என்றில்லை. "திருக்கொணாமலை" என்றுதான் உள்ளது. திருக்கோணமலைக்காரர் குறிக்கும் அடுத்த திருப்புகழ்

"தொடுத்த வாளென விழித்து மார்முலை" என்பதாகும் இதில்வரும்

அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
முகத்தி னோடணி குறத்தி யானையொ
 டருக்கொ ணாமலை தருக்கு லாவிய ...... பெருமாளே.

என்ற வரிகளே அவைகள். இதன் பொருள் வருமாறு ''அறங்களை வளர்த்து வாழ்ந்த உமா தேவியார் மகிழ்ச்சியுற, ஆறு திருமுகங்களுடன் விளங்கி அழகிய குறத்தியாகிய வள்ளியுடனும், யானை வளர்த்த தேவயானையோடும் அருக்கொணாமலை என்னும் தலத்தில் களிப்புடன் உலாவிய பெருமாளே."

இதில் குறிப்பிடப்பவது அருட்கொணாமலை என்ற வரிகளே ''திருக்கொணாமலை" என்ற வரிகள்கூட இல்லை. இந்த அருட்கொணா மலை கதிர்காமத்திற்கு அருகில் உள்ள ஊர் என்று நம்பப்படுகிறது.17

இதன்படிக்கு அருணகிரிநாதர் திருகோணமலையை அல்லாமல் கோணமாமலையில் உள்ள கோணேஸ்வரத்தின் கொபுரத்தில் உள்ள முருகனைக் குறிக்கின்றார் என்பதுதான் ஏற்புடையது. எனினும் இத்திருப்புகழ் திருக்கோணேஸ்வரத்தின் மீது பாடப்பட்டதாக உறுதிப்படுத்தபடுத்தமுடியவில்லை. திருப்புகழிலில் வேறு எவ்விடத்திலும் இத்தலம் பற்றியோ இப்பெயர் பற்றியோ குறிப்பிடப்படவில்லை. தவிர அதில் "திருக்கோணமலை" என்றில்லை "திருக்கொணாமலை" என்றுதான் இருக்கிறது. கி.பி 7ம் நூற்றாண்டிலும் கி.பி 13ம் நூற்றாண்டிலும் கோணேஸ்வரம் அமைந்துள்ள இடத்தின் பெயர் "கோணமாமலை" என்றிருப்பதை சான்றுகளோடு மேலே காட்டினோம். அருணகிரி நாதர் கி.பி.15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனவே அவர் கோணமாமலையில் இருந்த கோயில் பற்றி அறிந்திருந்தவராக இருந்திருக்கலாம் என்பது ஏற்புடையதன்று. திருப்புகழின் சந்த்திற்கு அமைவாக அவர் "கோணமாமலை" 'கொணாமலை" எனக்குறிப்பிடுகின்றார். பகத்தியியக்கத்தன் மரபின் படி தலங்களை "திரு" எனும் புனித பகுதியோடு சேர்த்து குறிப்பிட விரும்பியிருக்கிறார். அதன்போது ச்நதத்திற்கு அமைவாக "திருக்கொணாமலை" எனக் குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் எற்புடையது. ஏனெனில் கோணேஸ்வரத்தைக் குறிக்கும் 7ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட எல்லாச் சான்றுகளும் கோணமாமலை என்றே குறிக்கின்றன. இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.


மேற்சொன்ன சான்றுகளின் படி "திருகோணமலை" என்ற பெயர் ஏற்த்தாழ 1000 ஆண்டுகால பழமையானது. 1000 வருடம் வரலாற்றில் வாழந்த பெயராக இருக்கிறது. இந்த ஊரின், இந்த மக்களின் தனித்துவத்தையும் சகிப்புத்னமையையும் சொல்கின்ற பெயராக இருக்கின்றது. அதை தனியே இந்துத் தமிழுடன் நெருக்கமாக்குவதற்காக திருக்கோணமலை ஆக்குவது நியாயமற்றது. ஒரு சாராரின் சுயநலத்தின் பாற்பட்டது. 'திருக்கோணமலை" என்றழைக்கபடவும் எழுதப்படவும் தொடங்கி ஒரு நூறு வருடம் இருக்குமா அதை அழுத்தமாக வலழயுறத்தத் தொடங்கி 50 ஆண்டுகள்தான் இருக்கும் வெறும் 50 ஆண்டுகால பழக்கத்திற்காகவும் ஒருசாராரின் நன்மையை மட்டும் கருத்தில்க் கொண்டு 900ம் வருடமாக நாம் பெருமையாக வாழ்ந்த வாழ்க்கைத்தன்மையை அழிக்கிறீர்கள். எமது வரலாற்றுப் பெருமையையும் சகிப்புணர்வுடைய வாழ்வையும் மறைக்கிறீர்கள்.

தவிர இன்று திருகோணமலையும் போய் திருக்கோணமலையும் போய் 'திருக்கோணமலைய' என்றாகிக்கொண்டு வருகின்றது. அதைக் காப்பாற்றுவதற்கு முடியாமலுள்ளது. 'திருக்கோணமலை' எனபது உச்சரிப்பிலும், அதன் உருவாக்கத்தின் அடிப்படைத் தன்மையிலும் "திருக்கொணாமலைய"வுக்கு மிக நெருக்கமாக அமைந்து உதவிசெய்கிறது எனபதை பகுத்தறிவுள்ள எவரும் உணர்ந்துகொள்ள முடியம்.இவற்றைத் தடுப்படுதற்கும் எமது வரலாற்று பெருமையும் சகிப்புணர்வுள்ள வாழ்வியலையும் தக்கவைத்துக் கொள்ள நாம் திருகோணமலையை "திருகோணமலை" என்று அழுத்திச் சொல்வதே உதவிசெய்யும். திருகோணமலை வரலாற்றை பரந்த தேடலுடன் நுட்பமாக எழுதியுள்ள கலாநிதி க.சரவணபவன் திருகோணமலையின் வரலாற்றைக் கூறும் தனது இரு நூல்களின் பெயர்களையும் "வரலாற்று திருகோணமலை, காலனித்துவ திருகோணமலை" என்று "திருகோணமலை" என்ற பெயரைக் குறித்துள்ளமை அறியாமையினால் அல்ல.

வரலாற்றில் திருக்கோணமலை இருக்கவில்லை; திருகோணமலையே இருந்தது. திருகோணமலையில் ஒருசார்பு இருக்கவில்லை சகிப்புத்தன்மையே இருந்தது.


அடிக்குறிப்புக்கள்



1. குணசிங்கம்.செ,கோணேஸ்வரம்,பேராதனைப் பல்கலைக்கழகம், 1973, பக்.12., பக்.37-38.
2.மே.கு.நூல். பக்.61-62.
3. மே.கு.நூல். பக்.55-63
4.சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.68-69.
5.திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம்,2003, பக்.560-562
6.மே.கு.நூல், பக்.723-725.
7.பத்மநாதன்.சி, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு,2006, பக்.98.
8.மே.கு.நூல், பக்.101-103
9.சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.123-124.
10.பத்மநாதன்.சி, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு,2006, பக்.407
11. மே.கு.நூல், பக்.103.
12.சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.126-127
13. பத்மநாதன்.சி, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு,2006, பக்.105.
14.சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.125-126
15. பத்மநாதன்.சி, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு,2006, பக்.106.
16.குணசிங்கம்.செ,கோணேஸ்வரம்,பேராதனைப் பல்கலைக்கழகம், 1973, பக்.113- 114 , <<சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.180-1181
17 இந்த இணைப்பில் உள்ளது http://www.kaumaram.com/thiru_uni/tpun0649.html

No comments:

Post a Comment