Monday, December 5, 2011

இருட்டினில் நீதி கிடக்கட்டுமே……

எமது சமூகத்தில் மிக உயர்ந்த நம்பிக்கையை பெற்றிருப்பது நீதிமன்றம். பொது நல வழக்கு மற்றும்  அரசியல் சார்ந்த வழக்குகளில் நீதி மன்றத்தின் நம்பிக்கை கேள்விக்குட்படுத்தப்பட்ட போதும். சிவில் வழக்குகளில் நீதிமன்றத்தை நாம் பெருமளவில் விமர்சிப்பதில்லை. எது எவ்வாறாயினும் நாம் ஏற்றுக் கொண்ட  அல்லது வாழகின்ற சமூகு அமைப்பில் நீதியை தருவதற்கு உள்ள ஒரே இடம் நீதி மன்றமே.

ஆயினும் நீதிமன்றம் செல்லாமல் இருப்பதே ஒரு கௌரவமான வாழ்க்கை என்ற எண்ணங்கள் ஊறிப்போன சமூகமாக எம் சமூகம் இருந்து வருகின்றது.’கோர்ட்டும், ஆஸ்பத்திரியும் கால்வைக்கக் கூடாத இடங்களாகவே’ பெரியவர்களால் சொல்லப்பட்டு வருகிறது. நீதி மன்றம் என்பது குற்றங்களை கண்டுபிடித்து, குற்றவாளிகளை தண்டிக்கும் இடமாக மட்டுமே பொது மக்களின் புத்தியில் பதிந்துள்ளதே ஒழிய, நீதியை நிலைநிறுத்துகின்ற இடமாக பொதுப்புத்தியில் பதியவில்லை.

இதனாலேயே பலர் நீதிமன்றம் சென்றதில்லை. சென்றவர்களும் பொதுப்புத்தியில் பதிந்த கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் நீதி மன்றத்தின் நடைமுறைகள் அவ்வாறுதான் இருக்கின்றன. ஏனைய நீதி மன்றங்கள் பற்றித் தெரியாது ஆனால் வடக்கு கிழக்கு நீதி மன்றங்களில் இதிலிருந்த பெருமளவு வேறுபடாது.

இங்கு நான் நீதிமன்ற நடைமுறை என்பதன் மூலம் கட்டமைப்பு பற்றியோ அதன் நீதிவழங்கும் தன்மை அதனது நியாயப்பாடுகள், பொருத்தப்பாடுகள் பற்றியோ சொல்வதற்கு வரவில்லை. நீதி மன்றத்திற்கு சென்று ஒருவர் தன்னுடைய வழக்கை கொண்டு செல்வதில் உள்ள நடைமுறைகளைப் பற்றியே குறிப்பிடுகிறேன்.

ஏனெனில் நீதிமன்றத்தினுள் செல்வதற்கு ஒருவர் விரும்பாமைக்க பிரதான காரணங்களில் இதுவும் ஒன்றாகஇருக்கின்றது. சமீபத்தில் நீதி மன்றத்திற்கு சென்ற போத எனக்கேற்பட்ட அனுபவம் இந்த கருத்தை உறுதிசெய்வதாகவே படுகின்றது.

பெரும்பாலும் நீதிமன்றத்திற்கு செல்லும் பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருப்பதில்லை. ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவரை பொலிசாரே அழைத்து வருவர். இவர்கள் ஒன்று நண்பர்கள்/உறவினர்களுக்கு பிணைகட்டுவதற்கு அல்லது நண்பர்கள் / உறவினர்களின் வழக்கின் நிலமைபற்றி தெரிந்து கொள்வதற்கு அல்லது பலசமயம் வாதிகளாக, பாதிக்கபட்டவராகவே இருப்பர்.

நீதி மன்றத்திற்குள் நுழையும் போது வாசலில் உள்ள பொலிசார் அவர்களை வழிமறித்து அவர்களது செல்போன், குடை, ஹெல்மட் போன்றவற்றை வெளியில் வைத்துவிட்டு வரச் சொல்லுவார்கள். இவற்றை வைப்பதற்கான பாதுகாப்பிடத்தை  நீதி மன்றமோ அரசோ ஏற்படுத்தியிருக்காது. நீதி மன்ற வளாகத்திற்கு வெளியில் தனியார் ஒருவர் வைத்திருக்கும் சிறிய பாதுகாப்பு கடையினுள் (பாதனிக்கு டோக்கன் பெறுவது போல் பெற்றுக்கொண்டு) வைத்துவிட்டு வருவேண்டும். அவற்றின் பாதுகாப்பிற்கு நீதிமன்றத்தினதோ அரசினதோ உத்தரவாதமில்லை.

வாசல் தாண்டி உள் நுழையும் போதே உள் கடமையில் ஈடுபட்டிருக்கும் நீதி மன்ற பொலிசாரால்  சத்தம் போடாதே என சைகையாலும், மெல்லிய குரலிலும் எச்சரிக்கப்படுவதுடன் பொதுவரவேற்பறையின்  ஓராமாகப் போடப்பட்டிருக்கும் கதிரைகளில் உட்கார்ந்திருக்கமாறும் எச்சரிக்கை செய்யப்படுவார். உள்ளே வந்தவர் மறப்பேதும் சொல்லாமல் கதிரைகள் இருக்கம் ஓரங்களுக்கு உடனடியாகச் செல்லவேண்டும். நீதி மன்றத்திறற்கு அவர் புதிதாக வ்நதிருந்தாலே அல்லது தமது உறவினரதோ/நண்பாகளோ அல்லது வழக்கு எங்கே நடைபெறுகிறது என்ற தகவல் தெரியாமல் அவ்விடத்தல் 2நிமிடங்கள் நின்று சுற்றுமுற்றும் தேடிப்பார்தாலோ உடனடியாக காவலில் உள்ள பொலிசார் அவரிடத்தில் நெருங்கி வந்து ஓரத்திற்கு செல்லுமாறு அதட்டுவார். சிலவேளை கையால் தள்ளுவதும் உண்டு.

நீதி மன்றத்தின் பொது வரவேற்பறையில் வரவேற்பு உதவியாளரோ/ தகவல் உதவியாளரோ இருக்க மாட்டார். பொலிசின் கட்டளைப்படி அங்கே அவரைப்போலவே பலர் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கதிரைகளில் எங்கே போவது என்று தெரியாமல் பாடசாலைப் பிள்ளைகள் போல அமைதியாக அமர்ந்திருப்பார்கள். கதிரைகள் கிடைக்காதவர்கள்  நின்றபடி இருந்தார்கள். ஒரு சிலர் அருகிலிருந்தவர்களிடம் கதைப்பதற்கு வாயைத் திறந்தவுடன் கதைக்காதே என்ற அதட்டலுடன் பொலிசார் அவர்களை நோக்கி கடுமையான ஒரு பார்வையை வீசி அடக்குவார். பாடசாலையில் பழக்கப்படும் பழக்கம் இதற்கு நன்றாக ஒத்துழைக்கும்.

பொலிஸார் கவனிக்காத நேர இடைவெளிகளில் தான் இரகசியமாக தகவல்களை பாதி சாடையிலும் உதட்டசைவிலும் கேட்டுக் கொள்ளவேண்டும். அல்லது அவ்வழியில் செல்லும் வக்கீல் ஒருவர் உங்களிடம் என்ன விடயம என்று கேட்கும் வரைக்கும் காத்துக்கிடக்க வேண்டும்.

நீதி மன்றம் பற்றிய பயத்தோடு புதிதாக ஒருவர் நீதி மன்றுக்கு வருவாராக இருந்தால் அவர்நிலமை என்ன. ஓரமாக நின்று கொண்டிருக்க வேண்டியதாகவே இருக்கும்.
அரைநிலப்பிரபுத்துவ அடிமை முறை மிக அப்பட்டமாக வெளித்தெரிவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் நீதிமன்றத்தில் தான் என்பதை மிக தெளிவாகவே அறிய முடியும். நீதி மன்றம் என்பது நீதியைச் சொல்லுகின்ற இடம் என்ற எண்ணம் நீதி மன்றத்தின் வரவேற்புக் கூடத்திலோ அல்லது நீதி மன்றத்திலோ காத்திருக்கும் ஒருவருக்கு ஏற்படவாய்பே இல்லை.

தனக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது, அநீதி இழைக்கப்பட்டள்ளது,  நீதி எனக்குத் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீதி மன்றத்திற்கு வருபவர், அங்கே காவலர்களையும் நீதவானையும் பயத்துடனே பார்த்து மௌனமாக அவர் சொல்லுவதை ஏற்பதுபோலவே நீதிமன்ற நடைமுறைகள் உள்ளன.

அமைதியாக்குதல் என்பது அடக்குமுறையின் அடையாளம் தானே. நீதி மன்றிலேயே அடக்குமுறை சட்டரீதியாக அனுமதிக்கப் பட்டமாதிரித் தான் பொலிசாரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கும். நீதி சொல்கின்ற நீதவான் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக,  நீதி சொல்கின்றவரிடம் பயமும் மரியாதையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவே இந்நடைமுறைகள் உள்ளன. இதன்படிக்கு நீதிமன்றத்தில் வழங்கப்படும் நீதியை பயத்தாலும், அடிமைமுறையான மரியாதையாலும் மட்டுமே ஒருவர் ஏற்றுக் கொள்ளும் படி தயார் படுத்துப்படுகிறார்.

குறைந்த பட்சம் நீதியைச் சொல்பவர் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தி தனக்கு நீதி கிடைத்தது என்ற நம்பிக்கையை உருவாக்குதற்கான தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அமைந்திருந்தாலும் பரவாயில்லை. அடிமைத்தனப் பயத்தையும் அதனால் ஏற்படுகினற் மரியாதையும் பய்னபடுத்தித்தான் நீதிகள் வழங்கப்படுகிற நீதி என்ன நீதியாக இருக்க முடியும்.  இந்த ‘நீதி’ யைத்தான்  நாம் போற்றுகின்றோம். இந்த நீதி கிடைக்கவில்லை என்றுதான் நாம் போராடுகின்றோம்.

பேரினவாத அரசின் சட்டங்களும் செயல்ப்பாடுகளும் நீதிமன்றம நீதி செய்யும் என்ற நம்பிக்கையை  எமது நாட்டின் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்படுத்தவில்லை. ஆனால பயங்கரவாதச் தடைச் சட்டமும், அவசரகாலச் சட்டமும் நீதி, நீதி மன்றம் என்ற அக்கறையற்று கிடந்த கணக்கற்றவரை நீதி மன்றத்தின் வாயிலும் வக்கீலின் வீடுகளிலும் தவம்கிடக்கும் படி செய்துள்ளது.

தன் கணவனோ, சகோதரனோ, பிள்ளையோ கைது செய்யப்பட்டு நீதி மன்றத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் கேள்விப்பட்டு நீதி மன்றத்திற்கு வரும் கிராமத்து மிகவறிய ஏழை பெண்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். முதன் முதலாக நீதி மன்றத்திற்கு வரும் அவர்களை பொலிசார் சோதனை செய்து உள்ளே அனுப்பி, ஏன் வந்திருக்கிறார் என்றுகூட அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் ‘ஓராமாகப் போய் நில்’ என்று சொன்னால் அவர் என்ன செய்வார். ஏற்கனவே செய்யப்பட்ட கொடுரங்களை பார்த்து பொலிசார் என்றாலே பயங்கொண்டிருக்கும் அவர்களை,  நீதிமன்றில் வைத்து பொலிசார் ‘ஓரமாய்ப் போய் நில்’ என்றால் மூச்சுக்கூட விடாமல் ஓரமாக போய் நின்றுகொண்டேதானே இருப்பார்கள்.

சரி அவருக்கு அருகில் நிற்பவர்களாவது அவர் ஏன் வந்திருக்கிறார் என்று கேட்டு அவருக்குத தேவையான உதவிகள் செய்ய முடியுமா? என்று பார்த்தால் அதுகூட சாத்தியமில்லை. தெரிந்தவர்களையாவது தேடித் திரிந்து உதவி கேட்பதென்றால் அதற்கும் வழியில்லை. எந்த நீதி மன்றம் என்று தெரியாமல் முழித்தபடி நிற்க வேண்டியது தான். தடுத்துவைக்கபட்ட/ கைது செய்யப்பட்ட தன் மகனோ, கணவனோ, உறவினனோ வந்திருக்கிறாரா என்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடைக்குப்பட்ட கூண்டுக்குள் பார்பதற்கும் அனுமதிக்க மாட்டார்கள். யாராவது வக்கீல் இரக்கப்பட்டு வந்து உதவி செய்தால் மட்டுமே அவர் நீதி கிடைக்கு மிடத்துக்குச் செல்லமுடியும்.

இவ்வாறான சந்தர்பங்கள் எமது நாட்டில எவ்வளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது பற்றி நாம் சிந்திக்காமல் இருந்தது ஏன்? இந்த கேள்வி நியாயமான பதில்களை நாம் ஒவ்வொருவரும் தேடுவதை மறப்போமானால் நாம் நீதி பற்றியும், உரிமைகள் பற்றியம் எவ்வளவு கதைத்தாலும் அர்த்தமற்றதாகவே அமையும்.

நீதி கிடைப்பது கிடைக்காதது ஒருபுறம் இருக்கட்டும். அடக்குமுறைகளைத் தாங்கி அமைதியாக இருந்து அதிஸ்டத்தின் படிதான் நீதி கிடைக்கு மிடத்திற்கே போகலாம் என்றால் அந்த நீதி இருட்டிலேயே கிடக்கட்டுமே…..

No comments:

Post a Comment