Saturday, December 17, 2011

முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை……

கடந்த 15-12-2011 அன்று திருகோணமலை நகர்வாழ் இந்து மக்கள் பெருமிதத்துடன் கோணேசமலையைப் பார்த்தார்கள். தாம் சொல்லவேணடிய செய்தி ஒன்றை அழுத்தமாக சொல்லிவிட் திருப்தி அந்த மக்களின் மனங்களில் இருந்திருக்கும். ஆம் தங்க நிறத்தில் ஆஜானுபாகுவான 33அடி சிவன் சிலை அன்று திறப்பட்டது. திருகோணமலை நகரின் பெரும்பாலான இடங்களில இருந்து பார்க்கும் போது சிவனில் பட்டுத் தெறிக்கும் கதிரவனின் தங்க ஒளி கோணேசபூமி என்பதன் கட்புல அடையாளத்தை பரவவிட்டபடி இருக்கின்றது. மீண்டும் பக்தியும் ஆன்மீகப் பெருக்கும் கொண்ட நிகழ்வாக அது அமைந்திருந்தது.


கோணேசர் கோயிலில் அமைக்கப்பட்ட பிரமாண்ட சிலை பக்தியோடும் ஆன்மீகத்தோடும்  மட்டும் சம்பந்தப்பட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் கோணேசமலை எனபதே பக்தியைத் தாண்டிய அரசியல், நிர்வாக முக்கியத்துமுள்ள இடமாகவே இருந்து வருகின்றது. திருகோணமலையின் வரலாறு என்பது கோணேசர் மலையிலும் கோணேசர் கோவிலிலும் நடைபெற்ற மாற்றங்களாகவே உள்ளன. அந்த வகையில் கோணேசர் கோவில் ஏற்படுத்தப்பட்டள்ள இந்த மாற்றமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமையும்.

  • பேரினவாத அரசியலின் நிகழ்ச்சிதிட்டங்கள் மிகநேர்த்தியாகவும் விரைவாகவும் அமுல்படுத்தப்படுகின்ற திருகோணமலையில், தமிழரின், இந்துக்களின் பெருமைக்குரியதும் சடங்கியல் வழிபாட்டில் முக்கியம் பெறுவதுமான கன்னியா வெந்நீருற்றில் வெற்றிகரமாக சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சிநிரல் கண்ணுக்கு முன்னே வெற்றிகரமாக ஆர்ப்பரித்துக்கொண்டு நடக்கும் காலத்தில் தமிழ் இந்து அடையாளத்தையும் அதேயளவு ஆர்ப்பாட்டத்துடன் அறிவிக்கின்றதாகவே இச்சிலை பார்க்கப்படுகிறது.
  • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் புகழ்பெற்றதுமான கோணேமாமலையை சிங்கள பௌத்தமாக்கும் நோக்குடன் கோட்டைவாயிலுக்கு அருகாமையில் கோணமலையின் வடக்குப்பக்கமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரை உரி ய கவனிப்பை சிஙகள மக்களிடமே பெறாமல் போனதால்,  கதிர்காமம் போல் கோணேசர் கோயிலையும் ஏதோ ஒரு வழியில் சிங்கள பௌத்தத்தினுள் உள்வாங்கும் ஆசையுடன்  கோணேசர் கோயிலின் பிரதான வீதியின் இருமருங்கிலும் சிங்களவரின் கடைகள் ஏற்படுத்தி  கோணேசர் கோயிலுக்கு இதுவரை இருந்த இந்துத் தமிழ் அடையாளத்தை மாற்றுகின்ற இராணுவ மற்றும் சிங்கள அதிகாரிகளின் திட்டமிடலை  துணிவுடன் எதிர்கொள்கின்ற மாதிரியாக இச்சிலை அமைக்கப்பட்டது.
  • திருகோணமலையின் பெரும்பாலான இடங்களில் இருந்து பார்கக்கும் போது கோணேசர் மலையில்த் தெரியும் வெண்ணிற 10அடி உயர புத்தர்சிலை கோணேசமலைக்கு வழங்குகின்ற சிங்கள பௌத்த அடையாளத்தை வெற்றிகொள்வதாக இச்சிலை அமையும்.
  • திருகோணமலை பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பின் வெளிப்படையான அடையாளமாக பலவந்தமாக வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு அவர்கள் மொழியில் சொல்லப்பட்ட பதிலே இச்சிலை.
  • சிங்கள பௌத்தம் அரசமதமான நாட்டில், முக்கிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச அதிகாரிகள் இராணுவ மற்றம் படைத்துறையைச் சேர்ந்தவர்களாகவும் சிங்கள பௌத்த கடும்போக்களராக இருக்கின்ற மாவட்டத்தில், கடற்படையினரின் கண்காணிப்பில் இருக்கின்ற பிரதேசத்தில் , 2ம் கஜபா ரெஜிமேன்டின் வலிமையான தளமாக பல ஆண்டுகள் செயற்படுகின்ற இடத்தில் இவற்றை எல்லாம் எதிர்க்கின்றதை வெளிப்படுத்துவதாகவே இச்சிலை அமைக்கப்பட்டது.

நான் மேற்சொன்னவை ஊதிபெருப்பிக்கப்பட்ட வலிந்து திணிக்கின்ற கருத்துக்கள் என்று நீஙகள் எண்ணலாம், ஆனால் இச்சிலை அமைப்பினைத் திட்டமிட்டவர்கள், இச்சிலை அமைப்பு ஆதரவு வழங்கியவர்கள், இச்சிலையை பார்க்கின்ற திருகோணமலை தமிழ் இந்துக்களின் மனநிலை இவற்றில் ஒன்றிலாவது இருக்கின்றதை மனசாட்சி உள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்.

போர்த்துகேயர் கோணேசர் கோயிலை அழித்தது தொட்டு காலங்காலமாக திருகோணமலையின் தமிழ் மனங்களில் நிலைபெற்றள்ள அரச எதிர்ப்பு மனநிலைகளின் படியேதான் இச்சிலை பற்றிய கருத்தமைவுகளும் அமைந்திருக்கின்றது. இதில் புதிதாக எதுவுமில்லை. தமிழ் அடிப்படைவாத மனநிலையில் உள்ளவர்களால் இது கொண்டாடப்படவும் வரவேற்கப்படுவதுமான இச்செயலின் அடிப்படைவாத மதப்பாசிச சிந்தனைகள், தமிழினத் துவேசங்கள் ஆன்மீக பக்தி முலாம் பூசி  மறைக்கப்படுகிறது.

இல்லை இது ஆன்மிக உணர்வை அரசியலாக்கும் உன்னுடைய திட்டமிட்ட முயற்சி என்பவர்கள், இன்று இலங்கையில் அமைக்கப்படும் சிலைகள் வெறும் மத அடையாளங்கள் அல்ல. அவை இன மேலாதிக்கத்தினதும், மத அடிப்படைவாதத்தினதும் அடையாளமாகவே அமைகின்றது என்பதை மறுக்கின்றார்களா?

தமிழர் பிரதேச மெங்கும் அமைக்கப்படும் புத்தர்சிலைகளை பௌத்தத்தின் பக்தியினதும் ஆன்மீக உணர்வின் அடையாளமாக அப்பாவித்தனமாக நம்பமுடியுமென்றால் கோணேசர் கோயிலில் அமைக்கப்பட்ட ருத்திரன் சிலையையும் நான் இந்து ஆன்மீகத்தின் அடையாளமாக நம்பிக் கொள்கிறேன். ஆனால் தமிழர் பகுதியில் பரவலாக அமைக்கப்படும் புத்தர் சிலை பௌத்தத்தின் ஆன்மீக அடையாளமல்ல சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தின் நிகழ்ச்சி நிரல்படியே அமைகிறது என்பதை ஏற்றுக்கொண்ட  நான் கோணேசர் கோயிலில் அமைக்கப்பட்ட ருத்திரன் சிலையை தமிழ் இந்து அடிப்படைவாதத்தின் அடையாளமாகவே கருதமுடியும்.

தெளிவான தொடர்ச்சியான பண்டைய வரலாற்று ஆதாரங்களை உடைய வரலாற்றுப் பெருமையும், ஞான சம்பந்தர், சேக்கிழார், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல்பெற்ற திருத்தலம் என்பதால் கிடைத்த பிரத்தியும் தரமுடியாத ஆன்மீக உணர்வை 33அடி சிலை ஏற்படுத்திவிடும் என்பது அறிவின் பாற்பட்டதல்ல.

சிலை அமைத்து முடியும் வரை பெரிதாக விளம்பரப்படுத்தப்படாமல் விட்டதுடன், சிலை பொலிஸ் அட்தியட்சர் ஒருவரைக் கொண்டு திறக்கப்பட்டது வரை மிகத்திட்டமிட்டு இச்சிலை விவகாரம் மேற்கொள்ளப்பட்டது.

விளம்பரப்பரப் படுத்தப்படாமையை  பெரிய விடயமாகக் கொள்ளாது விட்டாலும், இந்துக்களின் புனித ஆலயத்தில் பெருமிதமாக அமைக்கப்பட்ட சிலை இந்துவோ, தமிழரோ அல்லாத பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியைக் கொண்டு திறக்கப்பட்டது எந்த ஆன்மிகத்தினுள்ளும் பக்தியினுள்ளும் அடங்குகிறது. பிராமணச் சடங்குகள் நிறைந்த இந்துமத்தில் பிராமணர்களால் மட்டும் சடங்கியல் தகுதி செய்யப்பட்டு புனிதப்படுத்தப்படும் சிலைகளே சக்தியும் ஆன்மீக வலுவும் உள்ளதாக நம்பப்படும். அவ்வாறாயின் இச்சிலையை அமைத்தவர்களின் நோக்கமும் இச்சிலை அமைக்கப்பட்டத்ன நோக்கமம் ஆன்மீகமல்ல என்பது தெளிவாகும். இதை அமைத்த கோணேசர் ஆலய அறங்காவலர் சபையினர் தமது திட்டமிடல்களை மெச்சிக் கொள்ளலாம். ஆனால் இன்னொரு உண்மையையும் கவனிக்கவேண்டும்.

கோணேசமலையை சிங்க பௌத்த அடையாளமாக்கல் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்துதான் திருகோணமலையின் சிங்கள பௌத்த ஆளும் வர்க்கம் அதே அளவு புகழும், வரலாறும் சடங்கியல் புனிதமும் கொண்ட கன்னியாவை குறிவைத்தது.

  1. முதற்கட்டமாக  தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பகுதி என்பதால் அங்கு ஏற்கனவே இருந் பிள்ளையார்கோயிலை புனருத்தாருனத்திற்காக இடிக்கும் வரைகாத்திரந்து  மீண்டும் கட்டுவதற்கு நீதிமன்றத் தடை பெறப்பட்டது.
  2.  அதே இடத்தில் புதிதாக அரசமரத்தின் கீழ் புத்த விக்கிரகம்அமைக்கப்பட்டது.
  3. எல்லாவற்றிக்கம் மேலாக  தற்போது அங்கு புதிதாக பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. இதற்காகவே புத்த பிக்கு ஒருவர் அங்கு தங்கியிருந்து முழுநேரம் ஒலிபெருக்கியில் அங்கு வருபவர்களிடம் நிதி சேகரிக்கிறார்.
  4. அங்கிருந்த இந்துப் புராணக் கதைகொண்ட அறிவிப்புப் பலகையை அரசஅதிபர் நேராகவே வந்து பிடுங்கிக் கொண்டு சென்றார். அத்துடன் தமிழ்ர் ஆட்சியதிகாரம் உள்ள உப்புவெளி பிரதேசசபையிடமிருந்து  கன்னியா வெந்நீருற்றின் பராமரிப்பு நிர்வாகம் பறிக்கப்பட்டது.

இப்பொழுது கோணேசர் கோயிலில் சிலை அமைக்கப்பட்டதை  கவனியாது விட்ட அரசநிர்வாகம் இதைவிட பிரமாண்டமாக கன்னியாவில் புத்தர் சிலை அமைக்கப்படுவதையும் அவ்வாறுதான் செய்யும். அப்போது தமிழ் உணர்வு பொங்கிக் கொப்பளிக்கும் போது ஒன்றும் செய்ய முடியாது.

புத்தர் சிலை அமைப்பவர்களின் நோக்கமும் கோணேசர் கோயிலில் ருத்திரன் சிலை அமைத்தவர்களினதும் நோக்கம் ஒன்றுதான். அது மத அடிப்படைவாத பாசிச நிகழ்சிநிரலையும் உணர்வுகளையும் உள்ளடக்கியது. வெறும் பக்தி, ஆன்மீக சாயங்களால் இதை மறைத்துக் கொள்வதன் மூலம் அமைதியையும் நிம்மதியான வாழ்வுச் சூழலையும் திருகோணமலையில் ஏற்படுத்தமுடியாது.

வரலாறு மற்றும் பண்பாட்டு ரீதியிலும் இச்சிலை தொடர்பான விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் உள்ளன. படிம அமைப்பு ரீதியிலும் இச்சிலை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அது பற்றியும் நாம் கவனத்தில் கொள்ளவெண்டும். ஆனால் அதைவிட இந்த அரசியல் உள்நோக்கம் அபாயகரமானது.  உள்ளே பரஸபர சந்தேகமும் அதிருப்தியும் அச்சமும் கொண்டதாக அமைந்தாலும் அமைதியாகவே இருக்கும் திருகோணமலை இயல்புநிலை மோசமாக்குவதற்கு தூண்டுகொலாகவே அமையும்

திருகோணமலை என்பது மூவினங்களும் வாழ்கின்ற மதச்சார்பின்மையுள்ள மாவட்டமாக இருந்தால்த்தான் அது அமைதியாக இருக்க முடியும் என்பது ஏன் உணர மறுக்கிறோம்.

மதவிமர்சனங்களை நான் தற்போது குறைத்துவிட்டேன். கோணேசர் மீது அதன் பண்டைய வரலாற்று பெருமையால் எனக்கு பாசம் அதிகம்.  அதைத் தாண்டியும் மத விமர்சனங்களை தீவிரமாக செய்யவேண்டியே உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்  ரொமிலா தாப்பரின் கூற்றை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது அவசியமானது என்றே கருதுகிறேன்.

 “மதவிமர்சனம் என்பது சமுதயப் புரட்சியினை கொண்டுவரும் நோக்கத்துடன், உணர்வுக்காக நடக்கும் போராட்டம்; மனித மனங்களை வெல்வதற்கான ஒரு போர். வெறுவார்த்தைகளில் கூறுவதென்றால், மதசார்பின்மைக்கான போராட்டம்”.



No comments:

Post a Comment