Tuesday, December 20, 2011

அன்பையும் அறிவையும் அன்னையிடமே வாங்கினோம்

அன்புமாய் அறிவுமாய் நின்ற பேருரு
அம்மா என்றவுடன் அன்பு என்பதுதான் நினைவில் வரும். நாம் எந்தளவுக்கும் அன்பானவர்களாக இருக்கலாம்  அது அம்மாவிடமிருந்து தான் உங்களுக்கு வந்திருக்கும். ஆனால் அறிவென்றவுடன் அம்மாவை நாம் சேர்ப்பதில்லை. காலகாலமாக எம் மத்தியில் ‘அறிவு’ என்பது தந்தையோடுதான் அடையாளப்படுத்தப் படுகிறது.

“தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்” என்று அவ்வைப் பாட்டியோடு தொடங்கி “அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு” என்றும் ” அன்னையிடம் நீ அறிவை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்” என்று அடிக்கடி ஞாபகமூட்டப்படுகின்ற சினிமாப் பாடல்கள் வரை  அறிவுக்கான தந்தையின் அத்தோரிட்டி  சந்தேகத்திடமின்றி நம்பவைக்கப்படுகின்றது. இவ்வாறு அறிவை ஆணுக்குரியதாக்கிய ஆணாதிக்கத்தையும் இருட்டடிப்பையும் நாம் அறிந்து பார்க்க முயற்சியாவது செய்திருக்கின்றோமா? பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதால்த்தான் தந்தையிடமிருந்து அறிவைப் பெற்றுக் கொள்ளவேண்டி ஏற்பட்டது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோமா? ஆசிரியத் தொழில் பெண்களுக்குரியது என்றாகிவிட்ட நிலையில், நர்சரி பள்ளியிலிருந்து உயர்தர வகுப்பு வரை கல்வி போதிக்கும் 70% ஆசிரியர்கள் பெண்களே என்பதையும் நாம் கவனத்தில் எடுத்திருக்கின்றோமா? எம் சமூகத்தின் அறிவுப் பரவலாக்கத்தில் பரும் பங்கு வகிப்பது பெண்கள் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றோமா? 

பெரும்பாலான பதில்கள் இல்லையென்றுதான் வரும். அறிவை ஆணுக்குரியதாகவும், அப்பாக்குரியதாகவுமே தொடர்ந்தும் வைத்திருப்பது ஆணாதிக்கமின்றி வேறு எதுவாக இருக்க முடியும்? எம் சமூகத்தில் அறிவும் கல்வியும் அப்பாவிடமிருந்தா பரவல்படுகிறது? அன்னை வெறும் அன்பை மட்டும்தான் எமக்கு வழங்குகிறாளா?

நடுத்தர வர்க்கத்தாரிடம் வேண்டுமானால் குழந்தைகள் “அறிவை” தந்தையிடமிருந்து பெற்றுக்கொள்வது பாதியளவு உண்மையாக இருக்கலாம். ஆனால் நடுத்தர வர்க்கத்து கீழுள்ள  உழைக்கும் மக்களிடமும் கிராம மக்களிடமும் அறிவு தந்தையால் பரவல்ப் படுத்தப்படவில்லை.  அவர்களின் குழந்தைகள் தம் தந்தையிடமிருந்து கல்வியை கற்றுக் கொள்வதுமில்லை. இதனால் தந்தைக்குக் குழந்தைகளின் கல்வி மீது அக்கறை இல்லை என்று நான் சொல்ல வருவதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். நான் குறிப்பிடுவது அவர்களும் தம் குழந்தைகள் நல்ல அறிவாளிகளாக, கல்விமான்களாக வரவேண்டும் என்பதில்  அதீத ஆசைகள் உள்ளவர்கள் தான். ஆனால் அவர்கள் தம் குழந்தைகளுக்கு கல்வியைச் சொல்லிக் கொடுத்து அறிவைப் அவர்களிடம் கொண்டு செல்ல வாய்ப்புக்கள் இல்லை என்ற நிதர்சனத்தையே சொல்லவருகிறேன்.

30 ஆண்டுகால போரையும் இறுதியில் பேரழிவையும் சந்தித்த எம் சமூகத்தில் அறிவையும் கல்வியையும் தம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பாதிக் குழந்தைகளுக்குத் தந்தைகள் அருகில் இல்லை. இருந்தவர்களும் சொல்லிக் கொடுக்க வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழலில் எம்மத்தியில் இன்றளவும் எழுத்தறிவு வீதமும் கல்வியும் அறிவும் உயர்நிலையில் இருப்பது யாரால்? அது எம் தாய்மார்களால்த்தான் என்ற உண்மை எம் மண்டையில் உறைக்கும்.

யுத்தம் ஏற்படுத்திய கொடும் விளைவுகளான கணவனை இழந்த தாய்மார்களின் பிள்ளைகளும் ,        காணாமல் போனவர்கள், சிறையிலும் தடுப்புக்காவலில் இருக்கின்றவர்களினதும்,  இருந்தவர்களினதும் குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்தது எப்படி? பிரத்தியேக வகுப்புக்கள் கூட இல்லாத கிராமங்களில், பிரத்தியேக வகுப்புக்கள் இருந்தாலும் அனுப்ப முடியாத வறுமை நிலையில் அக்குழந்தைகளுக்கு கல்வியைச் சொல்லிக் கொடுத்தது அக் குழந்தைகளின் அன்னைகளே.

காலையில் வேலைக்குச் சென்று கடுமையாக உழைத்து இருட்டில் வீடு திரும்பும் தந்தைமார்களுக்கு, தம் குழுந்தைகளுக்கு கல்வியையும் அறிவையும் ஊட்டுவதற்கு எவ்வாறு முடியும், கடும் உடலுழைப்பில் சோர்வில் குடித்துவிட்டு வரும் தந்தைமார்களின் குழந்தைகள் கல்வியையும் அறிவையும் பெற்றுக் கொண்டது யாரால்?  இன்றைய புதிய கல்வித் திட்டங்களில்  வழங்கப்படுகின்ற ஒப்படைகளிலும் செயற் திட்டங்களிலும் பிள்ளைகளுக்கு ஒத்தாசைகளும் உதவியும் செய்வது யார்? அப்பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்கள் தொட்டு அனைத்தையும் பெற்றுக் கொடுத்ததும், கொடுப்பதுவும் யார்? அப்பிள்ளைகளின் பாடசாலை சென்று அப்பிள்ளைகளின் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதன் படி அப்பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்வது யார்?

இத்தனை கேள்விகளுக்கும் பதில் அந்தப் பிள்ளைகளின் அன்னை என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

எம் சமூகத்தில் அன்பையும் அறிவையும் அன்னையிடமிருந்துதான் பெற்றுக்கொண்டோம். இன்னும் தெளிவாகச் சொன்னால் எம் சமூகம் அன்பையும் அறிவையம் பெண்களால்த்தான் பெற்றுக் கொள்கிறது.

இந்த சூழலை நாம் உள்வாங்கிக் கொண்டால்த்தான் எம் சமூகத்தில் அறிவுப் பரவலாக்கத்திலும் சமூகத்தின் அசைவியக்கங்களிலும் பெண்களின் பங்களிப்பையும் அன்பான அன்னையின் அறிவுப் பரிமாணத்தையும் சரியாக உணர்ந்து கொள்ள முடியும். அதனை உணர்ந்து கொண்டால்த்தான் சமூகத்தில் பெண்களுக்கான கௌரவத்தை சரியாக வழங்க முடியும்.

No comments:

Post a Comment