Wednesday, August 2, 2017

''மோகனாங்கி'' விடுபடல்களில் இருந்து தவிர்க்க முடியாமைக்கு……

-I-
'மோகனாங்கி நாவல்தான் தமிழில் தோன்றிய முதல் வரலாற்று நாவல் என்பது வரலாற்று ஆய்வாளர்களினதும் இலக்கியத் திறனாய்வாளர்களும் முடிவாகும்''1     என்று முருகேசு ரவீந்திரன் மிகச் சுலபமாக குறிப்பிட்டுச் செல்கிறார். இன்று தமிழின் முதல் வரலாற்று நாவல் மோகனாங்கி என்று உறுதிப்பட்டுவிட்டது. ஆயினும் 'மோகனாங்கி' தமிழின் முதல் வரலாற்று நாவல் என்ற இடத்தை அவ்வளவு சுலபமாக அடையவில்லை. தமிழ் இலக்கியத்தில் நவீன சிந்தனைகளின் தொடக்கமாக அமைந்த தொடக்ககால நாவல்கள் பற்றி ஆராய்ந்தவர்களில் பெரும்பாலானோர் ‘மோகனாங்கி’ தொடர்பில் 'முதல் வரலாற்று நாவல் என்று கருதவில்லை.

தொடக்ககால தமிழ் நாவல்கள் தொடர்பில் ஆராய்ந்த தமிழின்  மிக முக்கியமான நாவல் விமர்சகர்களில் ஒருவராக அறியப்படும் கநாசுவின் தொடக்ககாலத் தமிழ் நாவல்கள் பட்டியலில் ‘மோகனாங்கி’ இடம் பெறவேயில்லை.2 கநாசுவின் வழி தொடக்ககால தமிழ் நாவல்கள் குறித்து ஆராய்ந்த R. E.Asher உடைய ' The Tamil Renaissance And The Beginnings Of The Tamil Novel' என்ற கட்டுரையில் மோகனாங்கி பற்றிய குறிப்பே இல்லை.3 தனிச்சிறப்பு மிக்க மிகச்சிறந்த தமிழியல் ஆய்வாளர்களில் ஒருவரான Kamil V. Zvelebil  1974 இல் Jan Gonda வுடன் இணைந்து தொகுத்த A History of Indian Literature, Volume X: Dravidian Literature, Fasc. 1: Tamil Literature நூலில் 'நாவல்கள்' என்ற தலைப்பின் கீழ் ஆராய்ந்த 'வரலாற்று நாவல்கள்' பகுதியில் மோகனாங்கி குறித்து எதுவுமே கூறவில்லை.4 1990 இல் A Comparison Of Two Literary Renaissances In Madras என்ற கட்டுரையை எழுதிய Richard Kennedy உம் வரலாற்று நாவல்கள் பற்றி குறிப்பிடும்போது மோகனாங்கி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வரலாற்று நாவல்களின் தோற்றக்கூறுகளை 1900 இற்கு முற்பட்டதாகக் கொண்டுசெல்லக்கூட இல்லை. திராவிடவியலில் சீரிய பணிகளை செய்த பேரா.ச.வே.சுப்பிரமணியன் 1984இல் எழுதிய Novels in Dravidian Language (History & Trends) கட்டுரையில் தமிழ் வரலாற்று நாவல்கள் பற்றி குறிப்பிடும்போது மோகனாங்கி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. 1983 இல் பேரா.ச.வே.சுப்பிரமணியனால் எழுதப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 'திராவிட மொழி இலக்கியங்கள்' நூலிலும் தமிழ் வரலாற்று நாவல்கள் பற்றிக் குறிப்பிடும்போது 'மோகனாங்கி' பற்றி எதுவும் குறிப்பிடாமல் மேற்குறித்த ஆங்கிலக் கட்டுரையில் உள்ள விடயங்களையே குறித்துள்ளார். 2004 இல் இந்நூல் மறுபதிப்புச் செய்யப்பட்டபோதும் மாற்றம் எதுவுமில்லாமல் அப்படியே உள்ளது. இன்றுவரையான தமிழிலக்கிய வரலாறுகளிலுள்ள விடுபடல்கள் குறித்த சுட்டுதல் நீளும் என்பதால் அது இக்கட்டுரையில் தவிர்க்கப்படுகின்றது.  தமிழக தென்னிந்திய நிலைமை இப்படி இருக்க ஈழத்தில் இன்றுவரை பாடத்திட்டத்திற்குள் இருக்கின்ற பேரா.வி.செல்வநாயத்தின் "தமிழிலிலக்கிய வரலாறு" நூலும் 'ராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரமும், திருகோணமலையைச் சேர்ந்த  சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி என்பதும் ஆங்கிலத்திலுள்ள உலகியற் கதைகளாகிய நாவல்களை தழுவி தமிழிலெழுதப்பட்ட நூல்களாகும்' என்று இருவரியில் கடந்து செல்கிறது.  இன்றுவரை உயர்தர பாடத்திட்டத்தினூடாக தமிழிலக்கிய வரலாற்றைப் படிக்கும் மாணவர்கள் மோகனாங்கி ஆங்கில நாவலைத் தழுவி எழுதிய நாவல் என்றே அறிந்துகொள்கின்றனர். 

மோகனாங்கி ஆங்கில வரலாற்று நாவலான 'Hypatia' வின் தழுவல் என்று ஒருவாதம் தமிழிலக்கிய உலகில் இருக்கிறது. வித்துவான்.க.செபரத்தினம் அவர்கள் எழுதி மணிமேகலைப் பிரசுர வெளியீடாக வந்த 'தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்' என்ற நூலிலே இவ்வாதத்தை முன்வைத்துள்ளார். "சார்ள்ஸ் கிங்ஸ்லி (CHARLES KINGSLEY) என்னும் ஆங்கில மொழிப்புலவர், தஞ்சை நாயக்க மன்னர் காலத்து வரலாற்றுச் சம்பவமொன்றைக் கருவாகக் கொண்டு ஆங்கில மொழியிலெழுதிய 'ஹேபாதியா' (HYPATIA) என்னும் நாவலைத்தழுவி, சரவணமுத்துப் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட நாவலே 'மோகனாங்கி' ஆகும்' என்று அந்நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளது.9 

'Hypatia'  நாவலானது  Charles Kingsley 1853 இல் எழுதிய நாவலாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நவீன வரலாற்றின் ரேஜஸ் பேராசிரியர் எனும்
மதிப்புமிக்க பதவியை10 வகித்த (Regius Professor of Modern History) சார்ள்ஸ் கிங்ஸ்லி கத்தோலிக்க மத எதிர்ப்புணர்வுகள் தொனிக்கும் படியாக எழுதிய வரலாற்று நாவலே 'Hypatia'. ஹைபாஷியா என்ற தத்துவஞானியின் வாழ்க்கை பற்றிய புனைவான இது அலெக்ஸாண்டிரியாவுக்குச் செல்லும் ஃபிலிமோன் என்ற ஓர் இளம் துறவியினுடைய கதையையும் கூறுகிறது. அங்கு அத்துறவி அரசியல் மற்றும் மத போர்களில் கலந்து கொள்கிறார். கிறிஸ்தவரது மன்னிப்புக் கோட்பாடு பேசுவதாகக் கருதப்பட்டாலும், இந்நாவல் திட்டமிட்ட கத்தோலிக்க எதிர்ப்புத் தொனி கொண்டிருக்கிறது. அத்துடன் இது கிங்ஸ்லியின் இன மற்றும் மதத்தைப் பற்றிய பிற கண்டனங்களையும் பிரதிபலிக்கிறது. இவற்றில் பலவும் 19 ஆம் நூற்றாண்டின் பொதுவான கருத்துக்களாகவே அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்தப் புத்தகம் கிங்ஸ்லியின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்டது.11

இந்நாவலின் களமும் தளமும் தமிழகத்தைவிட வேறானது, இதில் தஞ்சை நாயக்கர் பற்றிய சம்பவங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் எப்படி இருக்க முடியும்.  தி.த.சரவணமுத்துப்பிள்ளை பற்றிய ஆர்வமும் தேடலும் கொண்ட வித்துவான்.க. செபரத்தினம் அவர்கள் செவிவழி தமக்குக் கிடைத்த செய்தியை முழுமையாக நம்பி தமது நூலில் பதிவு செய்ததாலே இது நேர்ந்துள்ளது. வரலாற்று ஆவணக்காப்பகத்தின் பொறுப்பாளராக, வரலாற்றின் மீது ஆர்வமும் தேடலும் கொண்டதுடன் பகுத்தறிவு சிந்தனைகளின் பால் ஈடுபாடுகொண்ட
தி.த. சரவணமுத்துப்பிள்ளை Hypatia' வை வாசித்து அதன் அருட்டுணர்வில் 'மோகனாங்கி'யை எழுதியதற்கான சாத்தியங்கள் இருந்திருக்கலாம். ஆயினும் இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு எழுதியதாக எந்தவொரு ஆய்வுகளிலும் பதிவுகளிலும் இல்லை. மோகனாங்கி பற்றி எழுதப்பட்டுள்ள பிற பதிவுகளிலும் அது ஓர் ஆங்கில நாவலின் தழுவல் என்ற விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆதலால் ஓர் ஊகவாதமாகவே  இது இன்றுவரை உள்ளது. பேரா.வி. செல்வநாயகத்தின் கருத்துக்கு அடிப்படை ஆதாரமெதுவும் எனது தேடலுக்குட்பட்டவகையில் அகப்படாததால் அவருடைய கருத்தை ஏற்க முடியாத நிலையே உள்ளது.

மோனாங்கி தமிழின் முதல் வரலாற்று நாவலல்ல என்று குற்றச்சாட்டை முன்வைத்தவர் பேரா.க.அருணாசலம். அவரது கலாநிதிப் பட்டத்திற்காக 1978 எழுதப்பட்ட ஆய்வானது  அதற்குப் பின்வந்த ஆய்வுமுடிவுகள் மாற்றங்களைச் சேர்த்து செழுமைப்படுத்தப்படாமல் 2005 இல் ‘தமிழில் வரலாற்று நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் தலைப்பில் நூலுருப்பெற்றது. இந்நூலில் க.அருணாசலம் ‘கல்கியை’ தமிழின் முதல் வராலற்று நாவலாசிரியராகக் கட்டமைக்கும் நோக்கு தெரிகிறது.  1942 தொடக்கம் 1965 வரையான தமிழ் வரலாற்று நாவல்கள் பற்றிய இந்நூலின் முதலாம் இயலான ‘வரலாற்று நாவலும் தமிழில் அதன் தோற்றமும்’ இரண்டாம் இயலான ‘தொடக்ககால வரலாற்று நாவல்கள்’ ஆகியவற்றில் ‘மோகனாங்கி’ தொடர்பான கருத்துக்களை அவர் முன்வைக்கிறார்.12

தமிழ் வரலாற்று நாவலின் தோற்றம் பற்றி ஆசிரியர்களிடையே கருத்தொருமைப்பாடு நிலவவில்லை’13 என்ற கருத்தை முன்வைக்கும் அவர் ‘மோகனாங்கி நாவலை எழுதிய தி.த.சரவணமுத்துப்பிள்ளை தமிழின் வரலாற்று நாவல் இலக்கியத்துறைக்கு முன்னோடியாக விளங்கினார் எனச் சோ.சிவபாதசுந்தரம் அழுத்திக் கூறுவது பெருமளவு பொருத்தமற்றதே’14 என முடிவுசெய்து ‘கல்கிக்கு முற்பட்ட காலப் பகுதியிலே தோன்றிய தமிழ் வரலாற்று நாவல்களுட் சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி நாவல் குறிப்பிட்டுக் கூறக்கூடியதொன்றாக விளங்கினாலும் சரவணமுத்துப்பிள்ளையைத் தமிழ் வரலாற்று நாவலின் தந்தை எனவோ முன்னோடி எனவோ கொள்வது பொருத்தமாகத் தோன்றவில்லை’15 என்று கூறுகிறார். அத்துடன்‘உண்மையில் (மோகனாங்கி) நாவலாசிரியர் தாம் எடுத்துக்கொண்ட காலப்பகுதியின் வரலாற்றுச் சூழலை நாவலில் முழுமையாகக் காட்டவில்லையெனினும் நாவலில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள், நாயக்க மன்னர்கள் பற்றி விபரங்கள் முதலியவை வரலாற்றுக்குப் பொருந்தக் கூடியவகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கனவாகும். வரலாற்றுச் சூழல் இந்நாவலில் ஓரளவு இடம்பெற்றுள்ள போதும் நாவலுக்குரிய பண்புகள் பலவகையிலும் புறக்கணிக் கப்பட்டுள்ளன’16 என்ற தனது முடிவுக்கான காரணத்தை முன்வைக்கிறார்.

எனினும் அவரே ‘பியரிசந்தமித்ர (கி.பி1814-1883) என்பவர் எழுதிய ஆலாலேர் துலால் (உயர் குடியிற் பிறந்த செல்வ மகன்) என்னும் நாவலே வங்காள மொழியின் முதல் நாவலாகும். எனினும் ‘நாவல்’ என்னும் இலக்கியத்திற்குரிய முக்கிய பண்புகளைக் கொண்டு முதன் முதலில் வெளியானது பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய துர்கேச – நந்தினி என்னும் நாவலேயாகும்.’17 என்று நாவல் பண்புகள் குறைந்தாலும் ஆலாலேர் துலால் நாவலை வங்காளத்தினதும் இந்தியாவினதும் முதல் நாவலாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால் மோகனாங்கி விடயத்தில் இக்காரணத்தைக்கூறியே தமிழின் முதல் வரலாற்று நாவல் ‘மோகனாங்கி என ஏற்க மறுப்பது அவரது ஆய்வின் நடுநிலை குறித்த சந்தேகத்தை எழுப்புவதுடன் அவரது ஆய்வுமுடிவை ஏற்பதிலிருந்து எம்மை விலத்தி வைக்கவும் தூண்டுகிறது.

மோகனாங்கி தற்போது வாசிப்புக்குக் கிடைக்காதபடியால் அதன் கதைப்போக்கு உரைநடை தொடர்பில்  அருணாசலம் முன்வைக்கும் குறைகள் தொடர்பில் மேலதிக விளக்கங்களை கூறமுடியவில்லை. ஆயினும் தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் மொழிபெயர்ப்புக்கதையான  ”உன் விருப்பம்போல்” அல்லது ”ராசலிண்ட் சரித்திர’த்தின் நடையும் கதைப்போக்கும் அக்காலத்தில் ஏனைய கதைகளை ஒத்ததாகவும் சுவாரசியமாகவுமே இருக்கிறது. மேலும் பேரா.அருணாசலம் தமது ஆய்வுக்கும் மேற்கோள்களுக்கும் எடுத்துக்கொண்டது ‘மோகனாங்கியின்’ சுருக்கப்பட்ட இரண்டாம் பதிப்பான ‘சொக்கநாயக்கர்” நூலையே. 389 பக்கங்கள் கொண்ட மோகனாங்கி நாவலானது தி.த.சரவணமுத்துப்பிள்ளையின்  மறைவின் பின்னர் அவரது மூத்த சகோதரர் தி.த.கனகசுந்தரம்பிள்ளையால் சுருக்கிப் பதிப்பிக்கப்பட்டது. இது அக்காலத்தில் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இருந்ததால் மாணவத்தேவைக்கான இச்சுருக்கப்பதிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற கருத்தும் முனைவைக்கப்படுகிறதெனினும் உறுதியாகத் தெரியவில்லை.  

இந்திய அளவில் முதல் 30 சரித்திர நாவல்களுக்குள் உள்ளடங்கும்19 ‘மோகனாங்கி’  நிஜமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட Historical Novel ஆகும்.20 மதுரை நாயக்க மன்னர்களின வரலாற்றை மிகச்சிறப்பாக எழுதிய R.சத்தியநாதையரின் ‘மதுரை நாயக்கர் வரலாற்றில்’ குறிப்பிட்டபடி ‘சொக்கநாத நாயக்கரின் ஆட்சிக்காலம் சிக்கல் நிறைந்ததும் சுவாரசியதுமானதுமாக இருக்கின்றது.21 சென்னை கீழைத்தேய சுவடிகள் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த தி.த.சரவணமுத்துப்பிள்ள கடுமையான தேடலையும் ஆராய்ச்சியையும் மேற்கொண்டே இந்நாவலை எழுதியிருக்கிறார் என்பதை பிற்கால ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். 
மோகனாங்கி பற்றிய தகவல்களை சரியாக முதலில் கவனப்படுத்தியவர் சில்லையூர் செல்வராசன்.22 தமிழ் வரலாற்று நாவல் உலகில் ‘மோகனாங்கி’யின் முக்கியத்துவத்தை பெரிதும் வலியுறுத்தியதில் சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும் சோ. சிவபாதசுந்தரமும் சேர்நது எழுதிய ‘தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி’ நூல் மிக முக்கியமானது.23 

மோகனாங்கி கதை நடைபெறும் சொக்கநாத நாயக்கரின் சமகால மிஷனரிமார்களின் குறிப்புகளிலிருந்து மோகனாங்கி நாவலில் சொல்லப்பட்ட தகவல்களும் மிஷனரிமார்களின் குறிப்புகளும் ஒத்துப்போவதை குறிப்பிட்டு மோகனாங்கி வரலாற்று நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டது என்பதை  அண்மையில் ஆய்வாளர் சுகந்தி கிருஸ்னமாச்சாரி சுட்டிக்காட்டியுள்ளார்.23 ‘தட்சிண இந்திய சரித்திரம்’ எழுதிய ‘பகடாது நரசிம்மலு நாயுடு’ ‘தஞ்சை நாயக்கர் வரலாறு எழுதும்போது சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கி நாவலைத் தமது வரலாற்றுக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக முருகேசு ரவீந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.24 
ஆரம்பத்தில்  தாம் எழுதிய ஆய்வுகளின் போதாமையை நிவர்த்தி செய்யுமுகமாக ‘The First Six Novels in Tamil’ என்று கட்டுரையை 1986 இல் எழுதிய  

Kamil Zvelebil அதில் தொடக்க கால தமிழ் நாவல்கள் பற்றி ஆராய்ந்த தமிழறிஞர்கள் விட்டுள்ள இடைவெளிகளும் விடுபடல்களும் தம் போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்களையும் தவறாகச் செல்வதற்கு வழிவகுத்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.25 இதன் தொடர்ச்சியாக 'தமிழிலக்கிய வரலாற்றிலும் எழுத்துலகிலும் தி.த.சரவணமுத்துப்பிள்ளை அசாதாரணமான ஓர் அடியெடுத்து வைத்ததுடன் ஒரு புதிய போக்கையும் உருவாக்கியுள்ளார்’ என்று ‘மோகனாங்கி’யின் இடத்தையும் தனித்துவத்தையும் சரியாக இனங்கண்டு நிலைநிறுத்தியதில் Kamil Zvelebil இன் The First Six Novels in Tamil’ கட்டுரை முக்கியமானது.26 ஏறக்குறைய ஆயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்தபடி ஒவ்வோராண்டும் மீள்பதிப்பாகும் தமிழ் வரலாற்று நாவல்களுக்கான தொடக்க அடியை எடுத்துவைத்தனூடாக சரவணமுத்துப்பிள்ளை தமிழிலக்கிய உலகின் மடைமாற்றத்தில் தனித்த அடையாளமாகிறார்.

அடிக்குறிப்புகள்
  1. http://www.tamilauthors.com/01/137.html 
  2. காவ்யா சண்முகசுந்தரம் (தொ.ஆ), இலக்கிய விசாரங்கள் க.நா.சு கட்டுரைகள் -1, காவ்யா,  சென்னை, 2005,.
  3. Asher, R. E.,  The Tamil Renaissance And The Beginnings Of The Tamil Novel, The Journal Of The Royal Asiatic Society Of Great Britain And Ireland, No. 1 1969.
  4. Kamil V. Zvelebil, Jan Gonda (Ed), A History of Indian Literature, Volume X: Dravidian Literature, Fasc. 1: Tamil Literature , Otto Harrasowitz, 1974.
  5. Kennedy.Richard, A Comparison Of Two Literary Renaissances In Madras, , Journal Of South Asian Literature, Vol. 25, No. 1, The City In South And southeast Asian Literature (Winter, Spring) 1990. 
  6. Subramanian, S.V, Novels in Dravidian Language (History & Tends)  , தமிழியல் Journal of Tamil Studies - 26, International  Institute of Tamil Studies, Tamilnadu   December 1984, pp.65 - 81
  7. சுப்பிரமணியன்,ச.வே., திராவிட மொழி இலக்கியங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு, 2004. (3ஆம் பதிப்பு).
  8. செல்வநாயகம்,வி.‎, தமிழ் இலக்கிய வரலாறு, ஶ்ரீ லங்கா அச்சகம், யாழ்ப்பாணம், 1960, பக்.177.
  9. செபரத்தினம்,க.,தமிழ் நாடும் ஈழத்து சான்றோரும், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, பக்.231.
  10. https://en.wikipedia.org/wiki/Charles_Kingsley
  11. https://en.wikipedia.org/wiki/Hypatia_(novel)
  12. அருணாசலம்,க, தமிழில் வரலாற்று நவாலின் தோற்றமும் வளர்ச்சியும், குமரன் புத்தக இல்லம்,கொழும்பு, 2005.
  13. மே.கு.நூ. பக்.27.
  14. மே.கு.நூ. பக்.29.
  15. மே.கு.நூ. பக்.30.
  16. மே.கு.நூ. பக்.50.
  17. மே.கு.நூ. பக்.15.
  18. List of Historical novels in Indian languages, https://en.wikipedia.org/wiki/List_of_Historical_novels_in_Indian_languages 
  19. சயோகராசா, செ. ‘திருகோணமலை ‘தி.த.சரவணமுத்துப்பிள்ளை’, தமிழ் உலகு தொகுதி 1 இதழ் 1,  கொழும்புத் தமிழச்சங்கம், ஐப்பசி 2003. பக்.10
  20. சத்தியநாத அய்யர், ஆர்., மதுரை நாயக்கர்கள் வரலாறு, (மொ.பெ.அர்ஷியா). கருத்துப்பட்டறை, மதுரை, 2016.
  21. செல்வராசன். சில்லயூர், ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி’
  22. சுந்தரராஜன்.(சிட்டி),பெ. கோ.,  சிவபாதசுந்தரமும். சோ., ‘தமிழ் நாவல், நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்,கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை 1977
  23. Suganthy Krishnamachari, ‘Where History owes it to Fiction’, Friday Review- The Hindu -, April 17, 2009.  http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/where-history-owes-it-to-fiction/article658168.ece
  24. முருகேசு ரவீந்திரன், ‘எம்மவர் எழுதிய மோகனாங்கி முதல் நாவல் - தமிழில் வரலாற்று நாவல்கள்’, தினகரன் – கூராயுதம், JULY 18, 2010, http://archives.thinakaran.lk/Vaaramanjari/2010/07/18/?fn=k1007185 
  25. Zvelebil,V Kamil, The First Six Novels in Tamil, தமிழியல் Journal of Tamil Studies - 30, International  Institute of Tamil Studies, Tamilnad, December 1986, pp. 03
  26. Zvelebil,V Kamil, The First Six Novels in Tamil, தமிழியல் Journal of Tamil Studies - 30, International  Institute of Tamil Studies, Tamilnad, December 1986, pp. 14

(புதிய சொல் இதழில் வந்ததன் மறுபிசுரம்)

1 comment:

  1. உங்களுடைய கட்டுரை எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. தற்போது நவீன இலக்கிய வகைமைகளை முக்கியமாக நாவல்களை ஆழப் புகுந்து ஆராய்பவர்கள் குறைந்து விட்டனர்.தங்களின் இந்தக் கட்டுரை ஒரு நல்ல முன்னுதாரணமான நாவல் ஆய்விற்கு எடுத்துக்காட்டு. தங்களிடம் உரையாடுவதற்கு வாய்ப்பு கிட்டினால் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்குப் பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி

    ReplyDelete