Friday, July 14, 2017

The Uses Of Reading II - என்ன நோக்கத்திற்காக நாம் வாசிக்கின்றோம்?

வாசிப்பு குறித்தும் வாசிப்பின் வரலாறு குறித்தும் மிகச்சிறந்த நூல்களை ஆக்கிய அல்பெர்ட்டோ மங்குவெல் The Uses Of Reading என்ற தலைப்பில் வாசிப்பு, நூலகம் என்பன குறித்த சிந்தனைகளை எழுதியிருந்தார். அதனை தேவா அவர்கள் மிகச் சிறப்பாகத் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். 'புதிய சொல் 5' இல் வெளிவந்திருந்த அம்மொழிபெயர்ப்பு இருபகுதிகளாக இங்கு பதிவேற்றப்படுகிறது.  பகுதி I வாசிக்க        மூலக் கட்டுரையை  இங்கே வாசிக்கலாம்.


-II- 

Lars Gustafsson இன் Death of a Bookeeper எனும் உணர்ச்சிகரமான நாவலில் Lars Lennart Westin பாத்திர விவரணத்தில் புற்றுநோயிலிருந்து கொண்டிருந்திருந்த Lars கலைவடிவங்களில் சிரமத்தினடிப்படை வரிசைப்படுத்துதலொன்றைச் செய்வார். முதன்மையாக சிருங்காரக் (erotic) கலைவடிவங்கள், அதைத் தொடர்ந்து இசை, கவிதை, நாடகம், வாணவேடிக்கைத் தொழிநுட்பம் எனத் தொடர்ந்து அழகிய நீர்த்தாரைக் கட்டுமானக்கலை, வாள்பயில் கலை, பீரங்கிப்படையுடன் முடிவுறுகிறது. ஆனல் ஒரு கலைவடிவத்தை அதனுள் புகுத்த முடியாது. நோவினை சகித்துக்கொள்ளும் கலை. "எனவே இங்கு நாம் தனித்துவமான கலைவடிவம் ஒன்றைப் பற்றிப் பேசுகின்றோம். அதன் இடர் அளவு எல்லையற்றது." என்கின்றார் Westin "யாராலும் இந்தக் கலையைப் பயின்று கடைப்பிடிக்க முடியாது" என முடிவிற்கு வருகின்றார். Westin சிலவேளை அவர் டொன் குயிஸ்ரோவை வாசிக்கவில்லைப் போலும். நோவைத் தாங்கிக் கொள்ள சரியான தேர்வு குயிஸ்ரோ என நான் கண்டுகொண்டேன். 
புத்தகத்தின் எந்தப்பக்கத்தைத் திறந்தாலும் எல்லாவித ஆக்கினைகளையும் அவமதிப்புகளையும் முகங்கொடுக்கத் தயாராக இருக்கும் அறிவாழம் வாய்ந்த ஸ்பானிய போர்வீரனின் குரல் முடிவில் எல்லாமே நலமாகத்தான் முடியும் எனும் செய்தியால் என்னை ஆற்றுப்படுத்தும். என் வளர்பருவ காலத்திலிருந்தே குயிஸ்ரோவிடம் திரும்பத் திரும்ப போய்க்கொண்டே இருக்கின்றேன். புத்தி சாதுரியமான கதையமைப்பால் எதிர்பாராத ஆச்சரியங்கள் என்னை தடுமாற வைக்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். அது மட்டுமல்லாது Don Quixote சொல்லாட்சியில் கட்டமைக்கப்படும் புதிரை விளங்கிக் கொள்ளவோ அல்லது அது விலகி வேறொன்றாய் மாறுவதையே புத்திசாலித்தனமாக பகுப்பாய்வு செய்யவேண்டிய தேவை இல்லாதது. அந்தப்புனைவை மகிழ்வாக வாசித்து அனுபவிக்கமுடியும். எந்த முயல்வுமின்றி அமைதியாக வீரத்திருந்தகையையும் அவரின் மேல் திடப்பற்றுக்கொண்ட குதிரை சஞ்சோவையும் கதைசொல்லியின் விவரணை வேகத்தில் எனை மறந்து மிதக்க முடியும். உயர்நிலைப்பள்ளியில் பேராசிரியர் Isaias Lerner வழிநடத்தலோடு முதன்முதலில் Don Quixote வை வாசித்ததிலிருந்து காலப்போக்கில் பல இடங்களில் வெவ்வேறு மனநிலைகளில் Don Quixote வாசிப்பின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளேன். எனது ஆரம்ப ஐரோப்பிய நாட்களில் மே 68 இன் எதிரொலி பாரிய மாற்றங்களை கட்டியங்கூறிய காலத்தில் அம்மாற்றங்கள் என்ன எனப் பெயிரிடவோ, வரையறை செய்யப்படாத வேளையில் Don Quixote வை வாசித்தேன். இந்த நிலைமை கபடமற்ற வீரத்திருமகன், அதியுயர் வீரப்பண்பு மரபைத் தீராத தாகத்துடன்
தமிழ் மொழிபெயர்ப்பு 
தேடுவதை ஒத்திருந்தது. டொன் குயிஸ்ரோவைத் தென் பசுபிக்கில் தீராத பணப்பற்றாக் குறையுடன் என் குடும்பத்தை நடாத்த முயன்றபோது வாசித்தேன், பொலினேசியாவின் அந்நியமான கலாச்சாரம் வேறு என்னைக் கோபம் கொள்ள வைத்தது. இது பரிதாபமான வீரத்திருமகன் உயர்குடி கோமான்கள் மத்தியில் சிறுமைப்பட்டதை ஒத்திருந்தது. டொன் குயிஸ்ரோவை கனடாவில் வாசித்தேன் இந்நாட்டின் பன்முகக் கலாசாரம். குயிஸ்ரோயிசத்தை சொல்லிலும் செயலிலும் ஒத்திருந்தது. இந்த வாசிப்புகளும், இதைவிட வேறு வாசிப்புக்களுடனும் இப்போது நான் டொன் குயிஸ்ரோவைத் வைத்திய ரீதியான வாசிப்பாக என் நோவுகளை சாந்தப்படுத்தும் களிம்பாக, என்மன ஆற்றுக்காக வாசிக்கப்போகின்றேன்.

இந்த டொன் குயிஸ்ரோக்களை நீங்கள் நூலகத்தில் தேடிக்கண்டுபிடிக்க முடியாது. அது என் தேயும் ஞாபகத்தில்தான் வைக்கப்பட்டிருக்கின்றது. Karel Capek, தனது தோட்டம் பற்றிய அருமையான புத்தகத்தில் தோட்டக் கலையை ஒரு விதியினுள் சுருக்கிவிடலாம் என்கிறார். உன் முயற்சியைவிடக் குறைவாகவே தோட்டத்திலிருந்து பெறுகின்றாய் இதையே நூலகங்களுக்கும் சொல்லலாம். நூலகங்களுக்கு எவ்வளவு பெரும்பசி எடுத்தாலும் இருக்கும் புத்தகங்களையே அவற்றால் திரட்டிச் சேர்க்க முடியும். ஒவ்வொரு புத்தகமும் நேற்றைய இன்றைய நாளைய எல்லாவித வாசிப்பு சாத்தியத்தையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளதென்பது நமக்குத் தெரியும். ஆனால் பைதகரஸ் கோட்பாட்டின் மறு அவதாரங்கள் போல் இந்த வியத்தகு வடிவங்களை நாம் எந்தப்புத்தக அடுக்கு நிரையிலும் காணமுடியாது. அது வாசகனிலேயே தங்கியுள்ளது. Paul Masson கொலற்றின் (Colette) நண்பன் பரீஸ் தேசிய நூலகத்தில் பணியாற்றினார். நூலகத்தின் விரிந்த புத்தகச் சேர்மத்தில் பதினைந்தாம் நூற்றாண்டு லத்தீன் , இத்தாலிய புத்தகங்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதைக் கவனித்தார். எனவே நூலக அகரவரிசைத் தொகுப்பு அட்டையில் கற்பனைப் புத்தகத் தலைப்புகளை எழுதி வைக்கத் தொடங்கினார். இதனால் வகைப்படுத்தலுக்கு மவுசு அதிகரிக்குமென்று அவர் சொன்னார். கொலற் அப்பாவித்தனமாக இதனால் என்ன பயன் விளைந்துவிடப் போகின்றது எனக் கேட்க, சீற்றத்துடன் வந்த மேசனின் பதில் எல்லாவற்றையும் பற்றி அவரால் யோசிக்க முடியாது என்பதாகும். ஒரு பொறுப்பான நிறுவனத்தை நிறுவகிப்பவருக்கு தான்தோன்றித்தனமான சிந்தனைகளை நடைமுறைப்படுத்த அனுமதிப்பது ஏற்புடையதல்ல.

ஞாபக நூலகத்தில் பருப்பொருள் உடலற்ற புத்தகங்கள் தொடர்ந்து புத்தக அடுக்குகளை நெருக்கியடித்துக் கொண்டிருக்கும். முன்பு வாசித்து முழுமையான ஞாபகம் இல்லாத கூட்டுச் சேகரத்தில் உள்ள புத்தகங்கள், உரைவிளக்கம், பொழிப்புரை, மதிப்புரையுடன் கூடிய புத்தகங்கள் சுயமாக நிலைக்க முடியாத மிகைச் செழுமை புத்தகங்கள், கனவிலும் கொடுங்கனவிலும் எழுதப்பட்டு இன்றும் இக்கனவுகளின் தெளிவற்ற நிலையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் புத்தகங்கள், இருக்க வேண்டும் என நாம் விரும்பும் ஆனால் இதுவரை எழுதப்படாத புத்தகங்கள், வெளியே பேசமுடியாத அனுபவங்களை கொண்ட சுயவரலாற்று நூல்கள், வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஆசைகள் பற்றிய புத்தகங்கள், ஒருகாலத்தில் வெளிப்படையாகத் தெரிந்து இன்று மறந்துபோன உண்மைகள் பற்றிய புத்தகங்கள், உயர்வான கண்டுபிடிப்புகள், வெளியே சொல்ல முடியாத கண்டுபிடிப்புகள் பற்றிய புத்தகங்கள், டொன் குயிஸ்றோ வெளியிடப்பட்ட தேதியிலிருந்து எல்லா மொழிகளிலும் வெளிவந்த பதிப்புக்கள் திரட்ட முடியும். மட்றிட்டில் உள்ள இன்சிரியூற்றோ செர்வந்திசில் (Instituto Cervantes in Madrid) இவை  திரட்டப்படுகின்றது. ஆனால் எனது டொன் குயிஸ்றோ என் பலதடவை வாசிப்பில் ஒவ்வொரு தடவையும் என் அனுபவங்களுடன் இணைந்து வந்த டொன் குயிஸ்றோவை, என் ஞாபகத்தால் கண்டெடுக்கப்பட்டு கட்டற்ற என் மனவெளியில் தணிக்கை செய்யப்பட்ட டொன் குயிஸ்றோவை என் மன நூலகம் என்ற ஒரு இடத்தில்தான் காணமுடியும்.

சிலவேளை இரு நூலகங்களும் மோதிக்கொள்வதுண்டு. டொன் குயிஸ்றோவின் பாகம் ஒன்று ஆறாம் அத்தியாயத்தில் வீரத் திருமகனின் நூலகத்தில் வேண்டப்படாதவைகளை அகற்றிச் சுத்தப்படுத்தலில் கிராமப் பாதிரியும் நாவிதரும் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு புத்தகத்தைக் கையிலெடுக்கும் போதும் அதனைத் தணிக்கை செய்தவர்கள் வாசித்ததை ஞாபகப்படுத்திக் கொண்டனர். அதனை அதன் முந்தைய காலச் சிறப்புகளின் அடிப்படையில் அழிப்பதா அல்லது பாதுகாப்பதா என தீர்மானித்தனர். தீக்கிரையாக்கப்பட்ட அல்லது அழிப்பிலிருந்து தப்பிய இருவகைப் புத்தகங்களுமே வெண்நிறக் காகிதத்தில் கருநிற மையச்சுப் பதிந்த சொற்களின் அடிப்படையிலல்லாது பாதிரியினுதும் நாவிதரினதும் மனதில் சேமித்து வைத்த சொற்களின் அடிப்படையிலேயே தேர்வாகின, இச்சொற்கள் அவர்கள் முதன்முதலில் இப்புத்தகங்களின் வாசகர்களானபோது அவர்கள் மனங்களில் பதிந்தவை. சிலவேளைகளில் அவர்கள் கேள்விப்பட்ட  சேதிகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டவை. பாதிரி,  Amadís de Gaula தான் இஸ்பெயினில் வீரப்பண்பு மரபு பற்றி முதலில் பதிக்கப்பட்ட புத்தகமென்று கேள்விப்பட்டதாகவும் அதுதான் இந்தக் கேடுகளுக்கெல்லாம் ஊற்றுக்கண் ஆகையால் அதனை எரிக்கவேண்டும் எனச் சொல்ல..... நாவிதர் அதற்கு எதிர்வாதமாகத் வெளிவந்தவைகளில் இதுதான் சிறந்ததெனக் தான் கேள்விப்பட்டதால் அதனை மன்னித்துவிடலாம் எனவும் கோருவார். சிலவேளைகளில் ஏற்கனவே நடந்தேறிய மனப்பதிவின் தீவிரத்தில் புத்தகத்தை மாத்திரமல்லாது அதனை வைத்தருப்பவர்களுக்கும் கொடுந்தண்டனை வழங்கப்படும். சிலவேளைகளில் மூலம் பாதுகாப்பாக இருக்க மொழிபெயர்ப்பு தடைசெய்யப்படும். இனிவரும் வாசகர்கள் இதனால் பாதிப்புறக்கூடாதென்ற காரணத்தால் சில புத்தகங்கள் நெருப்புக்கிரையாகாவிட்டாலும் நூலகத்திலிருந்து அகற்றப்பட்டன. டொன் குயிஸ்ரோவின் நூலகத்தை தூய்மைப்படுத்த முயன்ற பாதிரியும் நாவிதரும் உண்மையில் தங்கள் மனதில் இருந்த நூலகமாக அதை உருமாற்றவே முயற்சித்தனர். புத்தகத் தேர்வில் தங்கள் அனுபவங்களின் அடிப்படையிலேயே கழித்தலையும் விட்டுவைத்தலையும் நிர்ணயித்தனர். முடிவில் நூலகம் இருந்த அறை சுவரெழுப்பி மறைக்கப்பட்டது ஆச்சரியப்படத்தக்கல்ல. ஏனெனில் நூலகம் இருந்த எல்லா அடையாளங்களும் அழிக்கப்பட்டன. அங்கு என்றுமே ஒரு நூலகம் இருந்ததாகச் சொல்லவே முடியாது. வயதான வெற்றித்திருமகன் துயிலகன்று எழுந்து நூலகத்தைக் காணவில்லையே எனக் கேட்க அது தொலைந்து போய்விட்டது திடீரென்று மறைந்து போய்விட்டதென அவருக்கு சொல்லப்பட்டது. மறைந்தது சூனியக்காரனால்த்தான் (இப்படித்தான் குயிஸ்ரோ அனுமானித்தார்) அல்லது வாசகர்களால் மற்றைய வாசகர்களுக்கு வழங்கப்படும் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் உரிமை தங்கள் தனிச்சார்புக் கூற்றை மற்றையவர்கள் வைத்திருக்கும் புத்தகங்களுக்குள் திணிப்பதால் இவ்வுலகில் ஒவ்வொரு நூலகமும் எங்களுக்கு முன்வந்த வாசகர்களிலேயே தங்கியிருக்கின்றது.

இறுதியாக மனிதப் படைப்பாற்றல் வாசகரின் உயர் உச்ச ஆளுமையை வரையறை செய்கின்றது. ஒரு பிரதியை வாசகர் தனது எந்தவிதமான அனுபவங்கள், நயநுட்ப உணர்வு, அகத்திறணுர்வு, அறிதிறன் என்பவற்றோடு உள்வாங்குவதற்குக் குறுக்காக யாரும் நிற்கமுடியாது. அதற்காக எல்லாவற்றையும் அவன் சமனாக எடுத்துக்கொள்ளவும் முடியாது. எடுத்துக்காட்டாக மூர்க்கமும் கோபவெறியும் கொண்ட மனதின் புனைச்சுருட்டுகள் - உளப்பகுப்பாய்வாளர்களும் சூரியலிஸ்டுக்களும் அதற்கொரு பெறுமதியும் ஒருவகைத் தர்க்க வாதமும் உண்டு என்கின்றனர். அவ்வாறான பிரதிகளைப் புத்திசாதுர்யமாக அகத்தூண்டுதலுடன்
காரண காரியங்கள், கற்பனையை சிறப்பான முறையில் பயன்டுத்தி கருத்தின் சாரத்தை மறுவடிவாக்கம் செய்ய வேண்டும். அப்பிரதி சொல்லும் கருத்தை அப்படியே எடுத்துவிடாது அக்கருத்தின் தொடுவானெல்லையை நீட்டி படைப்பாளியின் நோக்கினையும் விரிவுபடுத்தி பார்க்கவேண்டும். வாசகரின் இந்த ஆளுமையின் எல்லைகள் உருவரையில்லாதவை தெளிவற்றவை. Umberto Eco அவை நமது புலனுணர்வாற்றலுடன் ஒத்துப்போக வேண்டுமென்கின்றார். இந்த நடுவர் தீர்ப்பை போதுமானதென எடுத்துக் கொள்வோம்.

வரையறைக்குட்பட்டதோ, கட்டற்றதோ இந்த ஆளுமையை வாசகர் முதுசமாக பெற்றுவிட முடியாது. அது பயின்று பெறவேண்டியதொன்று. இவ்வுலகின் எல்லவாவற்றுக்குமான பொருளை விளங்கிக் கொள்ள தேடுதலுடன் நாம் முயல்கின்றோம். வாசிப்பில், சைகைகளில் , ஒலிகளில், வர்ணங்களில் வடிவங்களில். சமூகத்தின் தொடர்பாடல் ஒருகலை. அதன் விதிகளை குறி நீக்கம் செய்து புரிந்துகொள்ளும் அறிவினை நாம் முயன்று பெறவேண்டும். சொல்லட்டவணை, சொற்றொடரியல், சுருக்கம், கருத்தின் படிநிலை, பிரதியை ஒப்பிட்டுப்பார்த்தல் என்பன அதற்கான சில உத்திகள். இவை சமூகத்திற்கு பொதுவான அறிவுக் கருவூலத்தைப் பகிர்ந்துகொள்ள விழைந்து நுழைபவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டியவை. அப்போதுதான் வாசிப்பின் முழுப்பயனையும் அவர்கள் பெறுவார்கள். கடைசிப்படியாக இப்பயில்வினை அவர்கள் தனியாகத்தான் கற்றுணர்ந்து ஒரு புத்தகத்தில் தங்கள் அனுபவங்களை காணமுடியும்.

இந்த வாசிப்பின் முழுப்பயன்பாட்டினை அதன் ஆளுமையைப்பெற ஊக்கப்படுத்தல் அரிதாகவே இருக்கின்றது. மொசப்பத்தேமியாவின்  ஸ்ரிரைப்களின் சமூக உயர்குடிப் பாடசாலைகளிலிருந்து, மத்தியகால உயர் கல்விப்பீடங்கள், மடாலயங்களிலிருந்து குட்டன் பேர்க் காலத்தில் அச்சுப்பிரதிகள் தாரளமாகக் கிடைத்த காலமாகட்டும், இன்றைய இணைய காலம்வரை வாசிப்பின் முழுமை என்பது ஒரு சிலருக்கான சிறுப்புரிமையாகத்தான்  தொடர்ந்து வருகின்றது. எங்கள் காலத்தில் பெருவாரியான மக்கள் கல்வியறிவுடையவர்கள் என்னும் மேலெழுந்த வாரியான எண்ணம் உண்டு. அவர்களால் ஒரு விளம்பரத்தை வாசிக்க முடியும். தங்கள் கையெழுத்தை ஒரு ஒப்பந்தத்தில் போட முடியும். இவை மாத்திரம இவர்களை ஒரு வாசகனாக்கிவிட முடியாது. வாசிப்பென்பது ஒரு பிரதியினுள் நுழைவது. ஒருவரின் தனிப்பட்ட அறிவாற்றலின் முழுச்சக்தியை பிரயோகித்து புத்தாய்வு செய்தல், அதனடிப்படையில் பிரதியை
தனதாக்கிக் கொள்ளல். ஆனால் ஏற்கனவே (பினோக்கியோ கட்டுரையில்) நான் குறிப்பிட்டிருந்தது போல் மிகப்பல தடைகளைத் தாண்டித் தான் வீறார்ந்த வாசக நிலையை எட்டமுடியும். குறிப்பாக வாசிப்பு வாசகனுக்கு கொடுக்கும் ஆற்றல் சமூகத்தை ஆளும் குறிப்பாக பல்வேறு அரசியல் பொருளாதார, சமய நடைமுறைகள் வாசகரின் கற்பனை ரீதியான சுதந்திரத்தை கண்டு பயப்படுகின்றன. வாசிப்பு அதன் மிகச்சிறந்த நிலையில் சிந்திக்கத் தூண்டும், கேள்வி கேட்க வைக்கும், சிந்தனையும் கேள்வியும் மறுப்குக்கு வழிவகுக்கும். அது மாற்றத்தை கொண்டு வரும். எனவே எந்த சமூகத்திலும் இதுவொரு ஆபத்தான முயல்வுதான்.

நூலகர்கள் இன்று தடுமாற வைக்கும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இளவயதினர் தகுதியான வாசிப்பை எப்படி செய்வதென்ற செயல்முறை அறிவற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களால் மின் பிரதியைத் தேடி கண்டுபிடிக்க இயலும் அதைத் தொடரவும் முடியும், வெவ்வேறு இணைய மூலாதாரங்களிலிருந்து பந்திகளை வெட்டி ஒட்டி மீளிணைப்பில் தனியானதொரு உருவாக்கமாக்க முடிகின்றது. ஆனால் அவர்களால் கருத்துக் கூறவோ, விமர்சிக்கவோ, விளக்கம் கூறவோ, அச்சடித்த பக்கங்களின் கருத்தின் சாரத்தை தங்கள் ஞாபகத்தில் பதித்து வைக்கவோ முடியாதவர்கள் போல் தோன்றுகின்றனர். மின் பிரதிகளின் எளிதில் அணுகத்தக்க தன்மை கற்பதற்கான அதீத தடைகளை ஒதுக்கி வைக்கின்றதெனும் தோற்றத்தை உருவாக்கிவிடுகின்றது. வாசிப்பின் தலையாய நோக்கத்தையே அவர்கள் புரிந்து கொள்வதில்லை எஞ்சியிருப்பது தகவல் திரட்டல் மட்டுமே தேவையான போது பயன்படுத்துவதே வாசிப்பின் நோக்கமாகக் குறுகிவிட்டது. வாசிப்பை வசப்படுத்தல் வெறுமனே பிரதிகள் சுலபமாகப் பெற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்குவது மட்டுமல்ல. வாசிப்பு தனது வாசகர்களை இறுகப்பின்னிய சொல்வலையினுள் நுழைந்து தனக்கென ஒரு தனிவழியை வெட்டித்திறக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி வைத்துள்ளது. அந்த திறந்த வழியினூடு வாசகர் தன் தனிப்பட்ட திசை நிர்ணயத்தை, பெறுபேறுகளை கண்டடைய வேண்டும். இதனை அவர் பிரதியின் பக்கங்களுக்கு வெளியில்த்தான் நிகழ்த்த வேண்டும். நிச்சயமாக மின்பிரதி இதனை நடாத்த எந்த தடங்களையும் தருவதில்லை. இருந்தும் மின்பிரதியின் தேவையற்ற ஆடம்பரம் ஒரு கருத்தினை ஆழமாக ஆராய, பக்கமொன்றின் உள்ளடக்கத்தை தெளிவாகப் பகுப்பாய்வுசெய்ய ஏற்பான வாய்ப்பினைத் தருவதில் தடைகளை ஏற்படுத்தி விடுகின்றது. திரையில் தெரியும் பிரதி வாசகனுக்குக் கொடுக்கும் பணிக்கும் பருவுடலான புத்தகம் அதன் மட்டுப்பட்ட வரி இடைவெளிகள் பக்க அமைப்பு, புத்தகக்கட்டு எனும் கட்டுக்கோப்புடன் வாசகனிடம் கோரும் முயற்சியும் வெவ்வேறானவை.
"எதையும் பெறலாம்" ஒரு கைத்தொலைபேசியில் விளம்பரத்தை வாசிக்கலாம், கமராவைப் பயன்படுத்தி படம் எடுக்கலாம், குரலைப் பதிவுசெய்யலாம், இணையத்தில் தேடலை மேற்கொள்ளலாம், சொற்களை படங்களை பரிமாறலாம், செய்திகளைப் பெறலாம் அனுப்பலாம் நிட்சயமாகத் தொலைத்தொடர்பை ஏற்படுத்தலாம். "எதையும்" என்பது இங்கு ஆபத்தாக 'ஒன்றுமில்லை' க்கருகில் சென்று நிற்கிறது.  ஒன்றைப் பெறல் என்பது (எதையும் என்பதைவிட) தேர்வடிப்படையில் ஆனது. மட்டற்ற சாத்தியங்கள் என்பதில் தங்கியிருக்க முடியாது. கூர்நோக்கு, சீர்தூக்கிப் பார்த்தல் தேர்வு செய்தல் என்பனவற்றிற்குப் பயிற்சி தேவை. அத்துடன் பொறுப்புணர்ச்சியும் வேண்டும். ஏன் ஒழுக்க அடிப்படைக்கூடத் தேவைதான். இளைய வாசகர்கள் தானியங்கிக்கார்களை ஓட்டப்பழகினாலும் ஓட்டுனர்கள் போல் தாங்கள் நினைத்தாலும் 'கியரை' மாற்ற முடியாது, தாங்கள் அடைய வேண்டிய இலக்கினை எட்ட வாகனங்களையே நம்பியிருக்கின்றனர்.

எங்கள் சரித்திரத்தின் ஒரு புள்ளியில் குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை சமூகத்தால் எழுத வாசிக்கப் பயன்படுத்தப்பட்ட பின்னர் களிமண்ணிலோ, பப்பிரஸிலோ எழுத்தாளனால் பொறித்த சொல், காலத்திற்கும் இடத்திற்குமான தனது தொடர்பை துண்டித்துக்கொண்டு விடுகின்றது. அவ்வார்த்தைகள் பொதுக்குறியீடு சுட்டும் எதுவாகவும் இருக்கலாம். விற்பனைக்கான ஆட்டின் எண்ணிக்கை, போர்ப்பிரகடனம் என்றாயின் அதுமூலமாகக் குறிப்பிட்டதாக இருப்பது மாத்திரமன்றி கண்டறிந்தவாறு இன்றைய வாசகனுக்கு அன்றைய சொல் குறிப்பிடும் ஆடானது பார்த்துணர்வதற்கு கண்களுக்கு புலனாகாவிடினும் அனுபவத்தினால் அந்த உணர்வினை எட்டி விடுகின்றார். குடும்பப் பண்ணையிலிருந்த ஆடாக அது இருக்கலாம். அல்லது கனவில் வந்துபோன பேயுரு ஆடாகவும் இருக்கலாம். போர்ப் பிரகடனம் போருக்கான ஆயத்த நிலைக்கான அறைகூவலாக மாத்திரம் வாசித்துவிட முடியாது அது ஒரு எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புண்டு. அல்லது பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் உத்தியாக அல்லது துணிச்சலைக் காட்டுவதாகவும் இருக்கமுடியும். எழுத்தில் பதித்த சொற்கள் குறிப்பான விருப்பாற்றிலின், விவேகத்தின் விளைபொருள்.   எனவே வாசிக்கும் வாசகர் இந்த விளைபொருளைக் கண்மூடித்தனமாகப் பின்தொடரவோ அல்லது தோற்றுவாயான விவேகம், புத்திசாதுரியம், விருப்பாற்றல் என்ன என்பதை ஊகிக்க முனையவோ தேவையில்லை.

இந்தப்புள்ளியில் வாசகர் கண்டடைவது தனது சமூகம் தொடர்பாடலுக்கு இடைச்சாதனமாக எதனைப் பயன்படுத்துக்கின்றது என்பதையே. அது சொல்லின் மொழி, இந்தச் சொல் திரிபடையக் கூடியது, தெளிவற்றது, ஐயப்பாடானது, இரட்டை மொழிதலுடன் கூடியது. சொல்லானது ஐயப்பாட்டிலும் தெளிவின்மையிலுமே சரி நுட்பமாக தன் பலத்தையும் கருத்துப் பதிவையும் வைத்துள்ளது. தன் வியத்தகு திறமையில் பொருளைச் சொல்லின் மீது உறுதி செய்யாதே பொறித்துச் செல்ல முடியும். "ஆடுகள்" அல்லது "போர்" என்ற சொற்களை எழுதும் எழுத்தாளன் துல்லியமாக அதன் கருத்தை முடிவுசெய்தே எழுதுகிறார். ஆனால் வாசகர் எழுத்தாளனின் குறிப்பிட்ட கருத்திற்கு இன்னும் விரிவாக்கத்தைச் சேர்த்துக்கொள்கின்றார். "ஆடுகள்" என்பதை  பெரிய ஆட்டு மந்தையையும் "போர்" என்பதற்கு போரில்லாது அமைதிக்கான வாய்ப்பிருப்பதையும் இணைத்து விரிவாகப்பார்ப்பார். ஒவ்வொரு பிரதியும் சொற்களால் உருவாக்கப்பட்டதால் அவை சொல்ல வந்ததைச் சொல்கின்றதுடன். எழுத்தாளரின் கருத்தாக்கத்தைவிட எழுத்தாளரின் கருத்தாக்கச் சட்டகங்களை உடைத்தெறிந்து அவரால் நினைக்க முடியாதளவு கருத்துக்களை வாசகர் தன்நிலையில் உருவாக்கிக் கொள்ளுவார். எழுதப்பட்ட நிலையான பிரதி மேலும் பல பிரதிகளை பிரசவிக்கும். சிலவேளையில் தூக்கத்திற்கும் விழிப்புக்குமான தெளிவற்ற நிலையில் எழுதிய பிரதியாய் நெகிழ்ச்சியான பிரதியாய் நகர்ந்துகொண்டே இருக்கும் பிரதியாய், வாசகரின் மனநூலகத்தில் சேமக்குவையயாய் திரண்டிருக்கும்.

டொன் குயிஸ்றொவின் முதற்பாகம் முப்பத்திரண்டாம் அத்தியாயத்தில்  களைத்து வந்த வீரத்திருமகனிற்கு இரவு படுக்கை வசதி கொடுத்த விடுதி உரிமையாளன் வீரப்பண்பு மரபு நாவல்களைப் பற்றி பாதிரியுடன் விவாதத்தில் ஈடுபட்டபொழுது இந்தவகைப் புத்தகங்கள் எவ்வாறு ஒருவரின் மனநிலையைக் குலைக்க இயலும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனக்குறிப்பிட்டான்.

"அது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை" விடுதி உரிமையாளன் விளக்க மளித்தான். 'என் புரிதலைப் பொறுத்தளவில் உலகில் அதைவிடச் சிறந்த வாசிப்பில்லை அதோ அங்கே இரண்டோ மூன்றோ அவ்வகை நாவல்களை வைத்திருக்கின்றேன். அத்துடன் வேறு சில காகிதங்களும் இருக்கின்றன. இது என் வாழ்க்கை மாத்திரமல்லாது. பலரது வாழ்க்கையையும் பாதித்துவிட்டுள்ளதென நான் உண்மையாகவே நம்புகின்றேன். அறுவடைப் பருவத்தில் பெருவாரியான அறுவடைத் தொழிலாளிகள் இங்கு வந்து சேர்வார்கள். அவர்களில் எப்போதுமே வாசிக்கக்கூடிய ஒருவரும் இருப்பார். அவர் இந்தப் புத்தகங்கள் ஒன்றைக் கையிலெடுக்க முப்பதுக்கும் அதிகமானோர் அவரைச் சுற்றிக் கூடுவோம், அவர் வாசிப்பை கேட்பதற்கு  எங்களுக்கு அவ்வளவொரு மகிழ்ச்சியாய் இருக்கும் அந்த மகிழ்வே மீண்டும் எங்களை இளமையாக்கும்"

விடுதி உரிமையாளனுக்கு போர் விவரணைகள் அதிக விருப்பம். கிராமத்தின் பால்வினைத் தெழிலாளிக்கு திருமணத்திற்கு முன்னான ரம்மியமான காதல் ஊட்டச் சித்தரிப்பில் ஆர்வம். விடுதியாளனின் மகளிற்கு தங்கள் சீமாட்டிகளை பிரிந்திருக்கும் வீரத்திருமகன்களின் பிரிவுப்புலம்பலில் நாட்டம் அதிகம். ஒவ்வொரு கேட்போரும் (வாசகரும்) அவளின், அவனின் அனுபவம், விருப்புக்கமைய அப்பிரதியை மாற்றிக் கொள்கின்றனர். அந்தப் பிரதியை தமதாக்கிக் கொள்கின்றனர். ஆனால் தணிக்கையாளனான பாதிரிக்கு டொன்குயிஸ்ரோ போன்ற கதைகள் வாசகரைப் பைத்தியமாக்குகின்றது.
டொன் குயிஸ்ரோவிற்கோ இக்கதைகள் நீதியான, சொல்லிலும் செயலிலும் உண்மையான ஒருவனின் நிஜவுலக நடத்தைக்கு ஔிரும் உதாரணங்கள். ஒரு பிரதி பல்வகை வாசிப்பை, ஒரு அடுக்கு நிறைந்த புத்தகங்களை, உரக்க வாசித்த அந்த ஒரு பிரதி வெளிக்கொணர்கின்றது. எங்கள் பசித்த நூலகத்தின் பக்கங்களை அதிகரித்து கொண்டு போகின்றது.    நிச்சயமாக அந்த வாசிப்பை கேட்போர் மனதில் அதிகரிப்பைக் கொண்டு வருகின்றது. இது எனது மகிழ்வான அனுபவமும்தான்.


எனது டொன் குயிஸ்ரோவிற்கு நான் ஆழமாக நன்றிக் கடன் பட்டவன் இரண்டுவார கால வைத்தியசாலை காலத்தில் அந்த இரட்டைத் தொகுப்பும் என்னுடன் நோய் நோன்பு இருந்தன. அமைதியான அவதானத்துடன் காத்திருந்தன. எனக்கு மகிழ்விப்புத் தேவையான போது என்னுடன் உரையாடின. . அவை இரக்கம் காட்டுவதிலோ, பணிவிலோ என்றுமே பொறுமை இழக்கவில்லை. நீண்டகாலமாகத் தொடரும் தமது உரையாடலை என்னுடன் தொடர்ந்தன. நான் முழுமையான நானாக இல்லாதவேளையில், நேரமென்பது அவைகளின்  விடயமே இல்லை என்பது போன்ற பாவனையில் இந்த நொடியும் கடந்து செல்லும் என்பதனை உறுதியாக நம்புவதுபோல் தனது வாசகரின் அசௌகரியமும் கவலையும் கடந்துபோகுமென்று நம்பிக்கை ஊட்டுவது போல் என் ஞாபகத்தில் பதிந்த அவற்றின் பக்கங்களே என் புத்தக அடுக்கில் தங்கி நிற்கும் என்ற பாவணையுடன் அவை என்னுடன் இருந்தன. அப்பக்கங்கள் எனது சுயத்தின் ஒரு பகுதியை விபரிக்கும் எனக்கு மிக நெருக்கமான தெளிவற்றதாக இருக்கும் அத்தொகுப்பின் பிணைப்பை விபரிக்க என்னிடம் இதுவரை வார்த்தைகளில்லை.

No comments:

Post a Comment