Thursday, January 21, 2010

தெருவோரத்து பஜார் பொடியனுக்குத் தெரிந்த பெண்ணியமும் யதார்த்தமும்

2006 நவம்பர் 5ம் திகதி இக்கட்டுரை 'தினக்குரல்' இவள் சக்தி பகுதியில் வெளிவந்திருந்தது. அப்போது சில எதிர்வினைகளையும் தோற்றுவித்திருந்தது. இப்போது இதில் சொல்லப்பட்ட விடயங்கள் இன்னும் வேறு பார்வைக் கோணங்களிலும் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. ஆயினும் மூலத்தை நான் மாற்ற விரும்பவில்லை ஏனெனில் இது

1. ஒரு பஜார் இளைஞன் தான் அடிக்கடி சந்திக்கின்ற, வசிக்கின்ற பஜார் இளைஞர்களைப் பற்றி எழுதியது
2. இலங்கைத் தேசிய நாளிதழில் வெளிவந்த பஜார் இளைஞர்களைப்பற்றிய முதலாவது கட்டுரை


முதலில் இந்தக் கட்டுரையை வாசிக்க நீங்கள் ஆர்வம் காட்டுவீர்களா? என்பது சந்தேகம் தான். ஏனெனில், பஜார் இளைஞர்களை அவர்களது கருத்துகளை எமது சமூகம் எந்தவொரு நடவடிக்கைகளிலும் கேட்பதுமில்லை. அனுமதிப்பதுவுமில்லை. ஆயினும், எல்லா இடங்களிலும் எல்லாத் தெருக்களிலும் எமக்குக் கணிசமான நண்பர்கள் உள்ளார்கள். அந்த ஏரியாவின் நியமிக்கப்படாத காவலராகவும், முதன்முதலில் அந்த ஏரியாவுக்குள் வருபவர்கள் அந்த ஏரியாவை எடைபோட உதவும் குறிகாட்டிகளாகவும் அநேகமாக எல்லா சமுதாயப் பிரச்சினைகளிலும் இவர்களின் பங்களிப்பு சிறிதளவாவது இருக்கும்.

அதேபோல் சாதாரணர் செய்ய அஞ்சும் ஆக்கபூர்வமான சமுதாய வேலைகளை செய்வதுவும் இவர்களாகத்தான் இருக்கும். இவர்களையும் நல்ல பணிகளில் ஈடுபட வைக்கலாம். ஆயினும் எம் சமூகம் அதைச்செய்யாமல் அவர்களை சமுதாயத்துக்கு வேண்டாதவர்களாகவே நோக்குகிறது. எம் மத்தியில் சமூகத்தை பலப்படுத்தும், சமூகத்தை முன்னேற்றும் வேலைகளைச் செய்கின்ற சமூக செயற்பாட்டாளர்கள், சமூகப்பணியாளர்கள் கூட இவர்களைக் கருத்தில் எடுப்பதில்லை. எனக்குத் தெரிந்து எந்தவிதமான பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குகளிலும் பஜார் இளைஞர்கள் கலந்து கொண்டதில்லை. இதில் கலந்து கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவதுமில்லை.

மேற்குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரும் ஆர்வத்தாலும் அக்கறையாலும் மட்டும் கலந்து கொள்வதில்லை என்பது எம் எல்லோருக்கும் தெரியும். இது ஒருபுறம் இருக்க கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகளுக்கு இவர்களை யாரும் அழைப்பதுமில்லை. இதன் மூலம் சமூகத்தில் பல வேலைகளில் ஈடுபடப்போகிற ஆற்றல் மிக்க இளைஞர் சமூதாயத்தின் கணிசமான தொகை சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமலும் இச் செயற்பாடுகளில் பங்குபற்றாமலும் போகிறது.

மற்ற சமூக செயற்பாடுகளை விட பெண்ணியற் செயற்பாடுகளில் இவர்கள் முக்கிமானவர்கள். பெண்களுக்கு பாதிப்புகளும் தொந்தரவுகளும் இவர்களால் மட்டுமல்ல ஆனால், இவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் வெளித்தெரிகின்றன. (இங்கு பாரிய குற்றங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை) சாதாரண பெண்ணிய விடுதலை வேலைகளில் ஈடுபடுபவர்கள் தாக்குதல்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளாவதில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது.

இவர்களுக்குத் தன்டனை வாங்கிக் கொடுப்பதன் மூலம் இப்பிரச்சினையை ஒழித்துவிட முடியாது. ஏனெனில், பஜார் என்பது குறிப்பிட்ட சிலர் மட்டும் உள்ள குழு அல்ல, தலைமுறை ரீதியாக வருவது. அதற்கு ஏற்றபடி தண்ணியல்பையும் மாற்றக் கூடியது. மற்றவர்கள் மதிக்கும் சமூக விதிகளையும், ஒழுக்கங்களையும் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டாதது. பழிவாங்கும் இயல்புள்ளவர்களே பெரும்பாலும் அங்கம் வகிப்பது. (இது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சில நல்ல பஜார் (..???)களுக்குப் பொருந்தாது) எனவே, ஒரு பஜாருக்கு தண்டனை கொடுத்தால் ஏனைய பஜார் அந்த வேலையை நூதனமாகவும் பிடிபடாமலும் செய்வதற்கு முயற்சி செய்யுமே தவிர, செய்யாமல் விட அல்ல. ஒரு பஜாருக்கு தண்டனை கிடைத்த செயலை தண்டனை கிடைக்காதவாறு செய்து தன் வல்லமையை காட்டவே வேறொரு பஜார் முயற்சி செய்யும்.


ஆகவே, இவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டாமல் அவர்களுக்கு உங்கள் கருத்துகளையும் அதில் உள்ள நியாயத்தையும் முன்னேற்றத்தையும் நன்மையையும் விளங்கப்படுத்துவதன் மூலம் அவர்களை சமூக செயற்பாடுகளுக்கு ஆதரவானவர்களாக மாற்றும் வேலையைச் செய்ய வேண்டும்.


ஏனெனில், இவர்கள் தான் பின்னர் குடும்பஸ்தர்களாகி வீட்டு வன்முறைகளை அதிகமாகவும் பாரதூரமான அளவுக்கும் ஏற்படுத்துபவர்களாக உள்ளார்கள். அது தவிர பெண் விடுதலையை பெருமளவில் மறுப்பவர்களாகவும் இவர்கள் உருவாகிறார்கள். எனவே, இவர்களை பெண்ணியச் செயற்பாடுகளில் உள்வாங்குவதன் மூலம் பெண்ணியச் செயற்பாடுகளின் வெற்றி கணிசமான அளவு இருக்கும். எவ்வாறெனில், பெண் அடக்கு முறைக்குக் காரணமான பாரம்பரியங்கள், இறுக்கமான கலாசாரங்களை இவர்கள் பெருமளவில் மதிப்பது இல்லை. அது மட்டுமல்லாமல் அவற்றை மீறக்கூடியவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.


இன்றைய பெண் விடுதலை, பெண்ணியச் செயற்பாடுகள் என்பவற்றில் ஈடுபடுபவர்கள் செய்வது என்ன என்பது பஜாரில் இருந்து போக்கிரித்தனம் செய்யும் நான் மதிப்பிட்டால் மேற்குறிப்பிட்ட வேலைகளில் உள்ளவர்கள் கோபிப்பதோடு கவனத்திலும் கொள்ளமாட்டார்கள். ஆயினும், மேலே சொன்ன காரணங்களில் நானும் பங்காளி என்ற வகையில் எம்மைப் பற்றி மதிப்பிடும் பெண்ணியவாதிகளின் செயற்பாடுகள் பற்றி கருத்துக்கூற எமக்கு உரிமையுண்டு. இன்று பெண்ணியச் செயற்பாடு என்பது வெறும் கோட்பாட்டு அடிப்படையிலும் வெறுமனே வாங்கிய சம்பளத்துக்கான கடமையாகவுமே உள்ளன. (அர்பணிப்போடு பெண்ணிய செயற்பாடுகளில் ஈடுபடும் சகோதரிகள், நண்பிகள், மதிப்பிற்குரியர்கள் மன்னிக்க) அவர்கள் தங்கள் சமூகத்தில் செய்யும் வேலைகளை வீட்டில் செய்வதில்லை பெண் அடக்குமுறையை சமூகத்துக்குள் கொண்டு வந்த, அதை இன்னும் நிலை நிறுத்துகின்ற மரபுகள், கலாசாரங்கள், விழுமியங்களைத் தொடர்ந்தும் பேணுவதில் ஆர்வம் காட்டுபவர்களாகவே உள்ளார்கள். அறிக்கைகளையும் கட்டுரைகளையும் மட்டும் எழுதிக் கொண்டு உள்ளார்கள். பெண்ணியச் செயற்பாடுகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இதில் வேதனையான விடயம் என்னவென்றால், இவர்களுக்கு பெண்ணியச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பெருந்தொகையான சம்பளமும் வாகனங்களும் வழங்கப்படுவது தான். (பெண்ணியச் செயற்பாடுகளில் ஈடுபடும் மதிப்புக்குரியவர்களும் உயர்பீடங்களிலும் உள்ளவர்கள் இங்கு கருத்தில் கொள்ளப்படவில்லை) இவர்களை உயர்மட்டத்தில் உள்ளவர்கள் நம்புவதும், அவர்கள் மூலம் சமூகத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்பதும் தான் இன்னும் வேடிக்கையானதும் வருத்தத்திற்குரியதாகவும் உள்ளது.

இவர்களுக்கு பெண் விடுதலை என்பது கூட விளங்கியுள்ளதா என்பது கூட இங்கு யோசிக்கப்பட வேண்டிய விடயம். இருக்கும் அமைப்பை மாற்றாமல் அதன் ஆதிக்க சக்திகள் ஏற்நுக் கொள்ளும் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்தவே இவர்கள் விரும்புகிறவர்கள். இதன் மூலம் சமூகத்தில் தங்கள் இருப்பையும் நிலையையும் தக்க வைத்துக் கொண்டு முற்போக்கானவர்கள் என்ற பெயரையும் சம்பாதித்து விடுகிறார்கள். இங்கு ஒன்று கவனிக்கப்பட வேண்டும். ஆதிக்க சக்திகள் ஓரளவு சுதந்திரத்தையும் விடுதலையையும் தருவதன் காரணம் அதைக்கூடத் தராவிட்டால் அடக்கப்பட்டவர்கள் முழுமையான விடுதலைக்காகப் போராடி தாம் அனுபவிக்கின்ற வசதிகளையும் வாய்ப்புகளையும் இல்லாமல் செய்து விடுவார்களே? என்ற பயத்தில் தான். என்பதை விளங்கிக் கொண்டுள்ளார்களா? அல்லது கிடைக்கின்ற வெற்றியைப் பயன்படுத்தி மேலும் வெற்றிகளைப் பெற முயலுகிறார்களா? இதற்கான விடைகள் என்னவென்பதை நான் சொல்லத் தேவையில்லை.

மறுபுறம் எம் மத்தியில் பால் நிலை வேலைகளைச் செய்கின்றவர்கள் பெரும்பாலும் நடுத்தர அல்லது உயர்நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஓரளவு படித்த பெண்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தம்முள் ஏற்கனவே உள்ள சமூக ஒழுக்கங்களையும் மரபுகளையும் பெரிதும் மதிப்பவர்களாக உள்ளார்கள். இதனால் தான் இவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவற்றை கேள்விக்குள்ளாக்குவதை, உடைவு ஏற்படுத்துவதை விரும்புவதும் இல்லை. தவிர பெண்ணியச் செயற்பாட்டாளர்களாக உள்ளவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் பார்வையில் அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் இல்லாதவர்களாகவுமே இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி அவதூறுகளை பரவல் படுத்துபவர்களாகவும் பொய்யான உறுதிப்படுத்தல்களைச் செய்பவர்களாகவும் மேற்சொன்ன எம் நண்பர்களாகவே உள்ளார்கள். இது ஆணாதிக்கத்தின் ஒரு வெளிப்பாடு தான். ஆயினும் இதை நாம் ஒதுக்கிவிட முடியாது. பெரும்பாலும் இவ்வாறு பெயர் எடுப்பது களத்தில் பணியாற்றுகின்ற பணியாளர்கள் தான். இப்பணியாளர்கள் உருவாக்குகின்றவையே இன்று ஓரளவு பேசும் வெற்றிகள். ஆனால், இவ் வெற்றிகளுக்கான பெயர்களும் பலன்களும் இவர்களை முழுமையாகச் சென்றடைகிறதா என்பது யோசிக்க வேண்டிய விடயம்.

இப்போது உள்ள பெண் விடுதலை செயற்பாடுகள் பெரும்பாலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் திட்டங்களாவே உள்ளது. தற்போது பெரும்பாலான உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பெண்ணியம் சார்ந்த கருத்திட்டங்களை முன்னெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இத் திட்டங்களுக்கு அதிகளவு நிதியை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பது இதற்கான பிரதான காரணமாக இருக்கின்றது. இவர்கள் தமக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு விசுவாகமாகவே இருப்பதை விரும்புகிறார்கள். இவர்களை இணைத்து ஒரு சுயாதீன அமைப்புகளாக இயங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது ஆரம்பத்தில் இச் சுயாதீன அமைப்புக்களில், நிதி வழங்குநரின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு வெளியில் சில வேலைகளை செய்வது போல் உள்நுழையும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் எம்மவர்கள் படிப்படியாக மீண்டும் உருவாகும் சுயாதீன அமைப்புகளை தங்கள் நிறுவன மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளை நூதனமாக மேற்கொள்கிறார்கள். இவர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சுயாதீன செயற்பாட்டாளர்களை ஓரங்கட்டி விடுகிறார்கள். இவர்களிடம் தொடர்ந்தும் நிதியைப் பெறும் நோக்கில் உள்ள உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் இவர்களின் செயற்பாடுகளை மௌனமாக அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் திட்டங்களுக்கான அறிக்கைகளில் வேண்டுமானால்; இவர்கள் எம் சமூகத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளை இலல்லாமல் செய்வதற்கு தாங்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருப்பவர்கள் போல சொல்லிக் கொள்ளலாம். ஆனால் யதார்த்தத்தில் அப்படியில்லை என்பது மட்டுமல்ல, தற்போது எம் மத்தியில் உள்ள பல பிரச்சினைகளை இவர்கள் கண்டு கொண்டதாகவோ அல்லது கருத்தில் எடுத்ததாகவோ தெரிய வில்லை. தமக்கென சில குழுக்களை உருவாக்கியுள்ள இவர்கள் அவர்களுக்கு பல விடயங்களைச் சொல்லாமல் மறைப்பதனூடாகவும் அவர்கள் சில விடயங்களை அறிந்தால் அதைதட்டிக் கழிப்பதனூடாகவும் தாம் மேதைகள் என்ற தோற்றப்பாட்டை கட்டமைத்து தம்முடைய மேலாண்மையை தக்க வைத்து கொள்கிறார்கள். உண்மையான பிரச்சினைகள் உள்ள அடித்தட்டு மக்களை இவர்கள் எந்தளவு தூரம் கவனத்தில் கொள்கிறார்கள் என்பதும் இங்கு ஆராயப்பட வேண்டிய விடயம்.

இதுவே இவர்களின் தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது. இவர்களோடு அல்லது இவர்களின் செயற்பாடுகளில் மக்கள் எந்தளவுக்கு பங்கேற்கிறார்கள் அல்லது ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தால் தோல்வி என்று குறிப்பிட்டதன் அர்த்தம் விளங்கும். சமீபத்திய உதாரணம் மட்டகளப்பில் அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு எதிராக வெளிவந்த பிரசுர விவகாரம்.

இந்தப் பிரச்சினை வேறு பல அபிவிருத்தி சமூக மாற்றத்துறைகளில் இல்லையா? என நீங்கள் கேட்கலாம். இருக்கின்றது ஆயினும், எல்லாப் பிரச்சினையிலும் பால்நிலை சம்பந்தப்பட்டுள்ளது என்பதாலேயே இதை முதலில் பெண்ணியத்தை நோக்கி எழுதினேன். இக் கட்டுரையை சம்பந்தப் பட்டவர்கள் ஏற்காமல் இருக்கலாம். சிலர் கவனத்தில் எடுக்காமல் இருக்கலாம். ஆனால், நான் என்னை தெளிவாக அடையாளப்படுத்தி என்னளவில் மிக நேர்மையாகவே இக் கருத்துகளை முன்வைத்தேன். என்னை மறுப்பவர்கள் அல்லது இதற்கு எதிர்வினை புரிபவர்கள் மனச்சாட்சியை மதித்து தம்மை வெளிப்படுத்தி இதில் நான் குறிப்பிட்டுள்ளவை பொய்யென நிரூபியுங்கள். இந்தக் கட்டுரை பேசியது உண்மையையே. இதன் மூலம் நான் கோருவது நான் குறிப்பிட்டவர்கள் தம் தோல்விகளை ஒப்புக் கொண்டு தம் செயற்பாடுகளில் ஒதுக்கி வைத்தவர்களையும் இணைத்து வெற்றியை நோக்கி நகருவதற்கான மாற்றங்களையே அதைச் செய்யுங்கள். அதைவிடுத்து இக் குரலை பெண்ணியத்திற்கு எதிரானதாக தயவுசெய்து சித்திரிக்காதீர்கள்.

No comments:

Post a Comment